தென் அமெரிக்க நாடான கயானாவின் வட அத்திலாந்திக் கடற்கரைக்கு அப்பால் இடம்பெற்ற பயணிகள் படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை (18) இரவு இடம்பெற்ற இந்த விபத்தில், மீட்புப் பணியாளர்கள் இதுவரை 69 பேரை உயிருடன் மீட்டுள்ள நிலையில், மேலும் 83 பேர் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் குறித்த படகில் 133 பேர் பயணித்ததாக பதிவுகள் தெரிவிக்கப்பட்டிருந்தன. எனினும், மீட்கப்பட்டவர்களில் பலரின் பெயர்கள் உத்தியோகபூர்வ பயணிகள் பட்டியலில் இடம்பெறாததால், படகில் 179 பேர் வரை பயணித்திருக்கலாம் என கயானா பிரதமர் மார்க் பிலிப்ஸ் தெரிவித்துள்ளார்.
விபத்துக்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், படகின் ஓட்டுநர் மற்றும் ஊழியர் ஒருவர் கஞ்சா போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தமை வைத்திய பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் ஜுவான் எட்ஜில் தெரிவித்துள்ளார்.
பணிநேரத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியமை மற்றும் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், படகோட்டி மற்றும் ஊழியர்கள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கயானா தலைநகர் ஜோர்ஜ்டவுனில் இருந்து போர்ட் கைடூமா பகுதிக்குச் சென்றுகொண்டிருந்த படகு, சனிக்கிழமை இரவு 11.01 மணியளவில் ஆபத்து சமிக்ஞையை அனுப்புவதற்கு முன்பே கவிழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் உயிர் தப்பிய பயணி எலினா மூன்சாமி, மிகப்பெரிய அலை ஒன்று மோதிய சில விநாடிகளிலேயே படகுக்குள் நீர் புகுந்து அது கவிழ்ந்ததாக தெரிவித்துள்ளார். “மிதந்து வந்த மரப்பெட்டி ஒன்றைப் பிடித்துக்கொண்டு உயிர் பிழைத்தேன்.
ஆனால், எனது 2 வயது குழந்தையின் கையை பிடித்திருந்தபோதும், அலையின் வேகத்தில் எனது கை நழுவி குழந்தை நீரில் மூழ்கியது” என அவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
