

சிங்கப்பூரின் தேசிய தின கொண்டாட்டம் பிரமாண்டமாக நடந்துமுடிந்தது.
பத்து ஆண்டுகளுக்குப் பிறகு காலாங்கிற்குத் திரும்பிய சிங்கப்பூரின் தேசிய தின அணிவகுப்பு அதிநவீன தொழில்நுட்பத்துடனும் புதிய பரிமாணத்துடனும் களைகட்டியது.
‘தொடுவானம் நோக்கி, முன்னேறட்டும் சிங்கப்பூர்!’ எனும் கருப்பொருளுடன் நடைபெற்ற 61வது தேசிய தினக் கொண்டாட்டம், சிங்கப்பூரர்களின் தளரா முயற்சியை உலகிற்குப் பறைசாற்றியது.
தேசிய தின வரலாற்றிலேயே மிகப் பெரிய ஒளிக் காட்சியமைப்பு, இவை அனைத்துக்கும் உயிர் கொடுத்தனர், 2,600 இற்கு மேற்பட்ட கலைஞர்கள்.
சுமார் 30 மீட்டர் உயரத்தில் கலைஞர் ஜாஸ்மின் சோக்கோ இரண்டு வான்கலைஞர்களுடன் பாடலைப் படைத்தார். அவர்களைச் சுற்றிலும் 300 ஆளில்லா வானூர்திகள் பவனி வந்தமை பிரமாண்டமான காட்சியாக இருந்தது.
உள்ளூர்ப் பிரபலங்களான ஜோக்கிம் கோமேஸ், ஹஃபிஸ் ரஹ்மான், உதய சௌந்தரி, சிசி லிம், குர்மித் சிங் ஆகியோர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினர்.
ஒட்டுமொத்த நிகழ்ச்சியும் ஆறு அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அதில் முதல் அத்தியாயம் அணிவகுப்பு அங்கமாகும். அதனைத் தொடர்ந்து வந்த மீதமுள்ள ஐந்து அத்தியாயங்களில் பலதரப்பட்ட கலைநிகழ்ச்சிகள் அரங்கேறின.
மாலை 6.30 மணிக்கு அணிவகுப்பு தொடங்க, மூத்த அமைச்சர் லீ சியன் லூங், துணைப் பிரதமர் கான் கிம் யோங் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அதிபர்கள் டோனி டான், ஹலிமா யாக்கோப் உள்ளிட்டோர் வருகை தந்தனர்.
இம்முறை அணிவகுப்பு அங்கத்தில் 32 பிரிவுகள் பங்கேற்றன. அவற்றில் 26 பொதுமக்கள் பிரிவுகளைச் சேர்ந்த 1,200க்கும் மேற்பட்டோர் இடம்பெற்றனர். கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலான காலத்தில் நடைபெற்ற அணிவகுப்புகளில் இதுவே மிகப் பெரிய பங்கேற்பாகும்.
அணிவகுப்புப் பிரிவினர் பார்வையாளர்கள் அமர்ந்திருந்த பகுதி வழியாக நடந்து சென்று மேடையை அடைந்தனர். சிங்கப்பூர் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு மன்றத்தின் பிரதிநிதிகள் அணிவகுப்பில் முதன்முறையாக பங்கேற்று கூடுதல் சிறப்பு சேர்த்தனர்.
