நாட்டின் தலைநகர் புது தில்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெற்று வரும் நிலையில், உலகத் தலைவர்கள் தங்க வைக்கப்படும் நட்சத்திர விடுதி, உச்சி மாநாடு நடைபெறும் அரங்கங்களுக்கு உச்சபட்ச பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
புது தில்லியில் பிரிக்ஸ் கூட்டமைப்பின் 18-ஆவது உச்சிமாநாடு இன்று சனிக்கிழமை தொடங்கி இரண்டு நாள்கள் நடைபெறவுள்ளது.
இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக, இந்தியாவுக்கு 7 ஆண்டுகளுக்குப் பின் சீன அதிபா் ஷி ஜின்பிங் வருகை தருகிறார். உச்சி மாநாட்டில் பங்கேற்க இன்று பிற்பகலில் புது தில்லி வந்தடையும் ஷி ஜின்பிங் – உடன் அமைச்சர், அதிகாரிகள் என 67 பேர் வருகிறார்கள். அவருக்கான சிறப்பு பாதுகாப்புகள், உணவுத் தயாரிப்புகள் குறித்த பல ஆச்சரிய தகவல்களும் வெளியாகியுள்ளன.
பிரதமா் மோடி இன்று இரவு உலக தலைவர்களுக்கு பிரமாண்ட விருந்து வழங்குகிறார். இந்த விருந்தில் சீன அதிபருக்கு வழங்கப்படும் உணவுகள் குறித்தும் அந்நாட்டு அதிகாரிகள் ஏற்கனவே பட்டியல் அளித்திருக்கிறார்களாம்.
மேலும், இந்திய அதிகாரிகளிடம், சீனா ஒரு கோரிக்கையை முன்வைத்தது. அதாவது, சீன ருசி தேர்வாளர்களை, சீன அதிபருக்கான உணவு தயாரிக்கும் உணவுக் கூடத்தில் அனுமதிக்கவும், சீன அதிபருக்கு வழங்கப்படும் உணவுகளை அவர்கள் முன்கூட்டியே ருசி பார்த்து, அவரது உணவு முறைக்கு ஏற்ப இருக்கிறதா என்பதை அவர்கள் உறுதி செய்து கொள்வார்கள் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சீன அதிபருக்கான உணவு மெனுவில், சிறு தானிய உணவுகள் அதிகம் இடம்பெறும் என்றும், பொதுவாக அவரது உணவு எளிமையான சைவ உணவாக அமையும் என்றும் கூறப்பட்டுள்ளதாம்.
சரியாக 24 மணி நேரம் ஷி ஜின்பிங் இந்தியாவில் தங்கியிருப்பார் என்றும், ஞாயிற்றுக்கிழமை முற்பகலில் அவர் சீனா புறப்படுவார் என்றும் கூறப்படுகிறது.
அவர் வருவதற்கு 10 நாள்களுக்கு முன்பே, அவர் பயன்படுத்தும் கார், தொலைத் தொடர்பு சாதனங்கள் போன்றவை இந்தியாவுக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறதாம்.
