Colombo (News 1st) 2022 கல்வி பொது தராதர உயர் தர பரீட்சைக்கான செயன்முறை பரீட்சைகளை எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் ஏப்ரல் 6 ஆம் திகதி வரை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
செயன்முறை பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்கள் அறிவித்துள்ளது.
அனுமதி அட்டைகளை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இருந்து தரவிறக்கம் செய்ய முடியும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மனைப்பொருளியல், பரத நாட்டியம், கீழைத்தேய சங்கீதம், கர்நாடக சங்கீதம், மேலைத்தேய சங்கீதம் மற்றும் மும்மொழிகளுக்குமான நாடகமும் அரங்கியலும் பாடங்களுக்கான செயன்முறைப் பரீட்சைகள் நடத்தப்படவுள்ளன.
ஒவ்வொரு செயன்முறைப் பரீட்சார்த்திக்கும், பரீட்சைக்குத் தோற்ற வேண்டிய திகதி, நேரம், இடம் என்பன அனுமதி அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், அவற்றை எக்காரணம் கொண்டும் மாற்ற முடியாது எனவும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஏனைய பாடங்களுக்கான செயன்முறைப் பரீட்சைகளை எதிர்காலத்தில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.