Colombo (News 1st) நிஷான் மதுஷ்க, குசல் மென்டிஸ் ஆகியோரின் இரட்டைச் சதங்கள் மற்றும் அஞ்சலோ மெத்தியூஸின் சதத்தின் உதவியுடன் அயர்லாந்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 704 ஓட்டங்களை குவித்தது.
போட்டியில் இரண்டாம் இன்னிங்ஸில் பதிலளித்தாடும் அயர்லாந்து இன்றைய நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 02 விக்கெட் இழப்பிற்கு 54 ஓட்டங்களை பெற்றிருந்தது.
காலி சர்வதேச மைதானத்தில் நடைபெறும் போட்டியில் அயர்லாந்து முதல் இன்னிங்ஸில் 492 ஓட்டங்களை குவித்தது.
ஒரு விக்கெட் இழப்பிற்கு 357 ஓட்டங்களுடன் இலங்கை அணி இன்றைய நான்காம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்தது.
நிஷான் மதுஷ்கவும் குசல் மென்டிஸூம் இரண்டாம் விக்கெட்டிற்காக 268 ஓட்டங்களை பகிர்ந்தனர்.
அபாரமாக துடுப்பெடுத்தாடிய நிஷான் மதுஷ்க 22 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் டெஸ்ட் அரங்கில் கன்னி இரட்டைச் சதத்தை எட்டிய நிலையில் 205 ஓட்டங்களை பெற்றார்.
நட்சத்திர வீரரான குசல் மென்டிஸ் டெஸ்ட் அரங்கில் கன்னி இரட்டைச் சதத்தை பூர்த்தி செய்த நிலையில், 245 ஓட்டங்களை பெற்றார். 18 பவுண்டரிகளும் 11 சிக்சர்கள் அதில் உள்ளடங்கின.
டெஸ்ட் இன்னிங்ஸில் அதிகூடிய சிக்சர்களை அடித்த, இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரராக குசல் மென்டிஸ் இதன்போது பதிவானார்.
இதேவேளை, ஓட்டங்களைப் பெறும்போது உபாதைக்குள்ளான தினேஷ் சந்திமால் 13 ஓட்டங்களுடன் மைதானத்தை விட்டு வெளியேறினார்.
முன்னாள் அணித்தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் டெஸ்ட் அரங்கில் 15 ஆவது சதத்தை எட்டினார்.
முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்பிற்கு 704 ஓட்டங்களை பெற்றிருந்தபோது, இலங்கை அணி ஆட்டத்தை இடைநிறுத்தியது.
இதனையடுத்து, முதல் இன்னிங்ஸை தொடர்ந்த அயர்லாந்து 38 ஓட்டங்களுக்கு முதல் இரண்டு விக்கெட்டுகளையும் இழந்தது.
இன்னிங்ஸ் தோல்வியை தவிர்ப்பதற்காக கைவசம் 8 விக்கெட்டுகள் உள்ள நிலையில் அயர்லாந்து 158 ஓட்டங்களால் பின்தங்கியுள்ளது.