Colombo (News 1st) கொழும்பு நகரின் வௌ்ளவத்தை, பாமன்கடை, நாரஹேன்பிட்ட, கறுவாத்தோட்டம், கோட்டை, கிராண்ட்பாஸ் ஆகிய பகுதிகளில் டெங்கு நோயாளர்கள் அதிகமாக பதிவாகியுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்தது.
கொழும்பு நகரின் ஏனைய பகுதிகளிலும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்தார்.
இந்த நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக விசேட டெங்கு ஒழிப்பு திட்டத்தை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இதற்காக 60 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பு மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி குறிப்பிட்டார்.
இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருப்பின், உடனடியாக வைத்தியரை நாடுமாறும் மக்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.
இவற்றில் 50 வீதமானோர் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர்.
மழையுடனான வானிலையுடன் டெங்கு நுளம்புகள் வேகமாக பரவுவதால், பொதுமக்கள் தத்தம் சூழலை துப்பரவாக வைத்துக்கொள்தல் அவசியம் என டெங்கு ஒழிப்பு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.