பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரை நீக்க ஆதரவு – ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன
Colombo (News 1st) இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியிலிருந்து அதன் தலைவர் ஜனக ரத்நாயக்கவை நீக்குவது தொடர்பில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவின் செயற்பாடுகளை கட்சி என்ற ரீதியில் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர், சட்டத்தரணி சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஜனக ரத்நாயக்கவை நீக்குவதற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
மின்சார கட்டண அதிகரிப்பிற்கு எதிராக முன்னிற்கும் ஜனக ரத்நாயக்கவிற்கு பிரதான எதிர்க்கட்சி என்ற வகையில் தாம் முன்னிற்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்ஜித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியிலிருந்து அதன் தலைவர் ஜனக ரத்நாயக்கவை நீக்குவதற்கான பிரேரணை எதிர்வரும் 24 ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதுடன், அன்று மாலை அது குறித்து வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.