Colombo (News 1st) அமெரிக்காவின் மத்திய வங்கி (Federal Reserve Bank) ஒவ்வொரு காலாண்டும் அடிப்படை வட்டி வீதத்தை நிர்ணயிக்கும்.
அமெரிக்காவின் பணவீக்கம் 3 சதவீதம் என்ற அளவில் இருந்து வருகிறது. இதனை 2 சதவீதத்திற்கும் கீழே கொண்டு வரும் நோக்கில் அமெரிக்க மத்திய வங்கி பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் ஒரு தொடர்ச்சியாக ரிசர்வ் வங்கியின் அடிப்படை வட்டி புள்ளிகளை 0.25% அதிகரித்துள்ளது. இதன் மூலம் 2001-ஆம் ஆண்டிற்கு பிறகு 22 வருடங்களாக எப்போதும் இல்லாத வகையில், இந்த வட்டி வீதம் அமைந்திருக்கிறது.
கால் சதவீத உயர்வு என்பது வங்கிகளின் கடன் வட்டி வீதத்தை 5.25%-லிருந்து 5.5% வரை கொண்டு செல்லும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்த அறிவிப்பை வெளியிட்ட மத்திய ரிசர்வ் வங்கியின் தலைவர் ஜெரோம் பவல் (Jerome Powell), வட்டி வீதங்களை நிர்ணயிக்கும் Federal Open Market Committee வழங்கிய ஆலோசனைகளை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறியுள்ளார்.
”பொருளாதார நிலைமையையும், விலைவாசியின் ஏற்ற இறக்கங்களையும் கூர்ந்து கவனித்து வருகிறோம். பொருளாதார வளர்ச்சியின் வேகம் சற்று குறைந்திருந்தாலும் அமெரிக்க பொருளாதாரத்தில் உள்ள அடிப்படை வலிமை காரணமாக, பின்னடைவு ஏற்பட வாய்ப்பிருப்பதாக தெரியவில்லை,” என ஜெரோம் பவல் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் வட்டி வீதம் மேலும் உயர்த்தப்படலாம் என தெரிகிறது. வட்டி வீத உயர்வின் விளைவாக வங்கித்துறை பல பொருளாதார அழுத்தங்களை தாங்க வேண்டியுள்ளது. அவை நிறுவனங்களுக்கு வழங்கும் கடன் வட்டி வீதத்தை ஏற்றினால் பணப்புழக்கம் குறையலாம். அது வேலைவாய்ப்பின்மை உட்பட பல சிக்கல்களை உருவாக்கும். அதன் விளைவாக சந்தையில் அத்தியாவசிய பொருட்களைத் தவிர மற்ற பொருட்கள் விற்காமல், தேக்க நிலை உருவாகலாம்.
வட்டி வீதங்கள் உயர்வதால் ஏற்படும் இதுபோன்ற தாக்கங்கள் பெரிய அளவில் இல்லாத வகையில், மிதமான விளைவுகளோடு அடுத்த நிலைக்கு பொருளாதாரத்தை கொண்டு செல்வதை Soft Landing என்று கூறுவார்கள். இந்த வழிமுறையைத்தான் அமெரிக்க ரிசர்வ் வங்கி கையாள முயல்கிறது.
You must be logged in to post a comment.