Colombo (News 1st) கொழும்பு மற்றும் கண்டி தேசிய வைத்தியசாலைகளில் அஞ்சியோகிராம் (Angiogram) பரிசோதனைகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஞ்சியோகிராம் பரிசோதனைகளை மேற்கொள்வதில் தடைகள் ஏற்பட்டுள்ளதால், பல இருதய நோயாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அரச கதிரியக்க தொழில்நுட்ப அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சானக்க தர்மவிக்ரம தெரிவித்தார்.
பரிசோதனை இயந்திரங்கள் செயலிழந்து 6 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை சீர் செய்யப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
கண்டி தேசிய வைத்தியசாலையில் குறித்த பரிசோதனை, சிகிச்சைக்கான காத்திருப்பு பட்டியலில் 8 ஆயிரத்திற்கும் அதிகமான நோயாளர்கள் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
அஞ்சியோகிராம் பரிசோதனையை தனியார் வைத்தியசாலைகளில் மேற்கொள்வதற்கு ஒரு இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான தொகை செலவாகும் என அரச கதிரியக்க தொழில்நுட்ப அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சானக்க தர்மவிக்ரம சுட்டிக்காட்டினார்.