கடந்த 06 மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற வாள் வெட்டு சம்பவத்திற்கு பழிவாங்கும் நோக்குடனையே கடந்த திங்கட்கிழமை தெல்லிப்பளையில் வாள்வெட்டு சம்பவம் நடைபெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், வன்முறை கும்பல் ஒன்றை சேர்ந்த ஒருவர் கடந்த 06 மாதங்களுக்கு முன்னர் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தனது மனைவியை பார்வையிட சென்ற போது, வைத்தியசாலைக்கு அண்மையில் வைத்து, அவர் மீது மற்றைய வன்முறை கும்பலை சேர்ந்தவர்கள் வாள் வெட்டு தாக்குதல் நடாத்தி இருந்தனர்.
இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தனது சகோதரியை பார்வையிட வந்த மற்றைய வன்முறை கும்பலை சேர்ந்த நபர் மீது, பழிவாங்கும் முகமாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது .
இந்தச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரி மேனன் வழிகாட்டலில் உப பொலிஸ் பரிசோதகர் பிரதீப் தலைமையிலான குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
விசாரணைகளின் அடிப்படையில் முல்லைத்தீவு , புதுக்குடியிருப்பு பகுதியில் பதுங்கி இருந்த மூவர் கைது செய்யப்பட்டதுடன் , தாக்குதலாளிகள் பயணித்த ஹயஸ் ரக வாகனத்தையும் பொலிஸார் நேற்றைய தினம் புதுக்குடியிருப்பில் இருந்து மீட்டு இருந்தனர்.
கைது செய்யப்பட்ட மூவரிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே , குறித்த தாக்குதல் பழிவாங்கும் தாக்குதல் என தெரிவித்துள்ளனர்.
இதேவேளை அவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூவர் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவர்களையும் கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அத்துடன் , தாக்குதலாளிகள் பயணித்த ஹயஸ் ரக வாகனத்தின் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் வாகனத்தில் துப்பாக்கி சூடுகள் காணப்பட்ட பாகங்களை மாற்றுவதற்கு , முயன்றுள்ளமையும் பொலிஸாரினால் கண்டறியப்பட்டுளள்து.
கைது செய்யப்பட்ட மூவரிடம் இருந்து இரண்டு வாள்கள் , முகத்தினை மூடி கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட கறுப்பு நிற துணிகள் கைப்பற்றப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.