Colombo (News 1st) சிவனொளிபாத மலை யாத்திரை காலத்தின் போது பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகளை உள்ளடக்கி, இரத்தினபுரி மாவட்ட செயலாளரினால் அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்படவுள்ளது.
நாளை(26) பூரணை தினத்தில் ஆரம்பமாகவுள்ள சிவனொளிபாத மலை யாத்திரை, அடுத்த ஆண்டு மே 24 ஆம் திகதி நிறைவு பெறவுள்ளது.
இந்த நிலையில், குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கமைய பெயர் குறிப்பிடப்பட்டுள்ள இடங்கள் மாத்திரமே தங்குமிடங்களாக பயன்படுத்தப்பட முடியும் எனவும் தற்காலிக தங்குமிடங்களை அமைக்கவோ அல்லது நடத்திச் செல்லவோ முடியாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தங்குமிடங்களில் யாசகம் பெறுவது அல்லது வழங்குவது தடை செய்யப்பட்டுள்ளதுடன், பெயர் குறிப்பிடப்பட்ட பாதுகாப்பான இடங்களைத் தவிர ஏனைய இடங்களில் நீராடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
யாத்திரைக்கான மார்க்கத்தில் அல்லது தங்குமிடங்களில் பொலித்தீன் பொருட்களை பாதுகாப்பற்ற முறையில் வௌியேற்றக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
யாத்திரீகர்கள் சிவனொளிபாத ஸ்தலத்தினுள் தங்குவதைத் தவிர்த்து, யாத்திரை நிறைவடைந்த உடன் வௌியேற வேண்டும் எனவும் வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.