இந்தோனேசியாவை சேர்ந்த சுமத்திரா தீவின் மேற்கு பகுதியிலுள்ள பெசிசிர் செலடான் பகுதியில் பெய்து வந்த கடும் மழையால், திடீர் வெள்ளமும், அதை தொடர்ந்து மண்சரிவும் ஏற்பட்டது. இதில் தற்போது வரை குறைந்தது 19 பேர் உயிரிழந்ததுடன் 7 பேர் மாயமாகியுள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது.
இம்மண்சரிவினால் மலையில் இருந்த பெரிய மரங்கள் பெயர்ந்து விழுந்தன. பெரிய பாறைகள் உருண்டு விழுந்தன. இவற்றால் நதிக்கரையோர கிராமங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கோடோ XI டருசான் பகுதியில் பெருமளவு சேதம் ஏற்பட்டுள்ளது. 80 ஆயிரம் பேர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்; 14 வீடுகள் மண்ணில் புதைந்துள்ளன.
20 ஆயிரம் பேர்களின் வீடுகள் மேற்கூரை வரை முழுவதுமாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் மின்சாரத் தடை, சாலைகளில் ஓடும் வெள்ள நீர், குப்பைகள் போன்றவற்றால் மீட்பு குழுவினர் கடும் சிரமத்திற்கிடையே சிக்கியுள்ள மக்களை மீட்க முயன்று வருகின்றனர்.