போதைப் பொருள் கடத்தல் வழக்கில் இருக்குநர் அமீர், டெல்லி மத்திய போதைப் பொருள் தலைமை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.
டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2000 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் தமிழகத்தை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரைணையில் நியூஸிலாந்த், ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளுக்கு போதைப் பொருள் கடத்தப்பட்டது தெரியவந்தது.
கடந்த 3 ஆண்டுகளில் 45 முறை, சுமார் 3000 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருள் கடத்தப்பட்டது தெரியவந்தது.
மேலும் இந்த கடத்தல் சம்பவத்தில் தமிழகத்தை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளரும் திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் மூளையாக இருந்ததும் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாணையில் அம்பலமானது. இதையடுத்து தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக்கை கைது செய்த போதைப் பொருள் தடுப்பு பிரிவினர், அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
இதில் ஜாபர் சாதிக், போதைப்பொருள் கடத்தலின் மூலம் சம்பாதித்த பணத்தில் தமிழ் சினிமாவில் திரைப்படங்கள் தயாரித்தது, அரசியல் கட்சிகளுக்கு நிதி அளித்தது மற்றும் ஹோட்டல் பிஸ்னஸில் முதலீடு செய்தது ஆகியவை தெரிய வந்தன. மேலும் ஜாபர் சாதிக் தயாரிக்கும் இறைவன் மிகப்பெரியவன் படத்தை இயக்குநர் அமீர் இயக்குவதும் இதற்காக ஜாபர் சாதிக் அமீருக்கு பணம் கொடுத்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பான விசாரணைக்கு ஏப்ரல் 2 ஆம் திகதியான இன்று ஆஜராகுமாறு, டெல்லி மத்திய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் அமீருக்கு சம்மன் அனுப்பினர்.
இந்நிலையில், இயக்குநர் அமீது டெல்லியில் உள்ள போதைப் பொரும் தடுப்புப்பிரிவு தலைமை அலுவலகத்தில் இன்று தனது வழக்கறிஞர் பிரபாகரனுடன் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.
அவரிடம் இன்று பிற்பகல் வரை போதைப் பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் விசாரணை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. ரம்ஜான் பண்டிகைக்கு பிறகுதான் அமீர் ஆஜராவார் என கூறப்பட்ட நிலையில் இன்றே ஆஜராகியுள்ளார்.
இதனிடையே, இறைவன் மிகப் பெரியவன் திரைப்படத்திற்காக இயக்குநர் அமீருக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு முன்பணமாக 28 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தப் படம் 70 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.