சர்வதேச ரி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான தூதராக தடகள வீரர் உசைன் போல்ட்டை ஐசிசி நியமித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் ஜூன் 1 முதல் 29 வரை ரி-20 உலகக் கிண்ணம் நடைபெறுகிறது. இந்நிலையில், உலகில் மிக வேகமாக ஓடக்கூடிய நபரான ஜமைக்காவின் தடகள வீரர் உசைன் போல்ட் உலகக் கிண்ணத்துக்கான தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று 8 முறை தடகள போட்டியில் தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்த உசைன் போல்ட், மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரர் கிறிஸ் கெயிலின் நெருங்கிய நண்பர்.
இதுகுறித்து உசைன் போல் பேசியதாவது :
“ஐசிசி ரி-20 உலகக் கிண்ணத்தின் தூதராக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். கிரிக்கெட் வரலாற்றின் ஒரு பகுதியாக இருக்கும் கரீபியன் மண்ணில் இருந்து வந்தவன் என்பதால், கிரிக்கெட்டுக்கு என் இதயத்தில் எப்போதும் சிறப்பிடம் உண்டு. உலக அளவில் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். இதுபோன்ற மதிப்புமிக்க போட்டியின் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.