Sangathy
News

மீலாதுன் நபி தினம் இன்று(28)

Colombo (News 1st) இஸ்லாத்தின் இறுதி இறை தூதர் முஹம்மது நபி நாயகத்தின் பிறந்த தினமான மீலாதுன் நபி தினம் இன்றாகும்.

முஹம்மது நபியவர்களின் வாழ்க்கை சரித்திரத்தை உலகளவில் வாழும் பில்லியன் கணக்கான மக்கள் தினமும் ஞாபகப்படுத்துகின்றனர்.

மக்க மா நகரில் கி.பி 570 இல் அப்துல்லாஹ் – ஆமினா ஆகிய இருவருக்கும் பிறந்தவரே முஹம்மது நபி (ஸல்) அவர்கள்.

இறைவனால் காலத்திற்கு காலம் மனித குலத்தை நல்வழி காட்ட அனுப்பப்பட்ட தீர்க்கதரிசிகளின் வரிசையில் இறுதியாக வந்தவரே முஹம்மது நபி(ஸல்) அவர்களாவார்.

நபியவர்களது வாழ்வு, போதனைகள் மற்றும் அடைவுகள் கடந்த பதினான்கு நூற்றாண்டுகளாக முழு உலகிலும் பல்வேறுபட்ட நிறங்கள், கலாசாரங்கள் மற்றும் சமூகங்களைச் சேர்ந்த பில்லியன் கணக்கான மக்களால் பின்பற்றப்படுகிறது.

அவர் 40ஆவது வயது வரை மக்கள் மத்தியில் உண்மையாளர்,  நம்பிக்கைக்குரியவர் என நற்சான்றுகளைப் பெற்று மிகுந்த மரியாதைக்குரியவராக இருந்தார்.

எனினும், 40ஆவது வயதில் இறைதூதை ஹிரா குகையில் முதன் முறையாக பெற்று அதனை மக்களிடம் எடுத்துரைக்க ஆரம்பித்த போதே அவருக்கு பெரும் எதிர்ப்புகளை சந்திக்க நேர்ந்தது.

நபியவர்கள் கடந்து வந்த பாதை இலகுவானதல்ல.

தான் பிறந்து வளர்ந்த மக்காவில் ஒதுக்கப்பட்டதோடு நேசித்த அந்த நகரிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

மதீனாவிற்கு இடம்பெயர்ந்து சென்ற அவருக்கு மதீனாவாசிகள் பெரும் வரவேற்பளித்தனர்.

மதீனாவின் தலைவராகப் பதவியேற்ற நபியவர்கள், அங்கு வாழ்ந்த சகல இன மக்களையும் அழைத்து ஒரு பொதுவான சாசனத்தை கட்டியெழுப்பினார்.

‘மதீனா சாசனம்’ என அழைக்கப்படும் இந்த சாசனம் பல்வேறு வரலாற்று ஆய்வாளர்களையும் நவீன அரசியல் விஞ்ஞானிகளையும்  கவர்ந்துள்ளது.

நபியவர்கள் வெறுமனே ஒரு மத போதகராக இருக்கவில்லை.

அவர் ஓர் அற்புதமான வாழ்வொழுங்கை அறிமுகப்படுத்தி அதன் பிரகாரம் வாழ்ந்து காட்டினார்.

அவரின் வாழ்வு பற்றிய ஒவ்வொரு அம்சமும் பதிவு செய்யப்பட்டு இன்றளவும் பாதுகாக்கப்பட்டு பின்பற்றப்பட்டும் வருகிறது.

அவர் ஒரு தந்தையாக, கணவராக, தலைவராக, நீதிபதியாக மற்றும் வழிகாட்டியாக சிறந்ததொரு முன்மாதிரியாக காணப்பட்டார்.

உண்மை, நம்பிக்கை, நாணயம் மிக்க சமுதாயத்தை உருவாக்க பாடுபட்டு அதில் வெற்றியும் கண்ட முஹம்மது நபியவர்கள் தனது 63 ஆவது வயதில் இவ்வுலகை விட்டுப் பிரிந்தார்…

Related posts

திருகோணமலை விமானப்படைத் தளத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக இந்திய விமானப்படைத் தளபதி உறுதி

Lincoln

பொசன் தினத்தை முன்னிட்டு விசேட ரயில் சேவை

Lincoln

க.பொ.த உயர்தர பரீட்சை இன்று(04) ஆரம்பம்

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy