Colombo (News 1st) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் டெங்கு காய்ச்சலினால் 11 மாத குழந்தையொன்று நேற்று(25) உயிரிழந்துள்ளது.
கோண்டாவில் பகுதியை சேர்ந்த குழந்தையே உயிரிழந்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்தியர் தங்கமுத்து சத்தியமூர்த்தி நியூஸ்பெஸ்ட்டுக்கு தெரிவித்தார்.
சுகவீனம் காரணமாக கடந்த 22ஆம் திகதி குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
இதனிடையே யாழ்.மாவட்டத்தில் மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் டெங்கு நோயினால் இதுவரை 4 மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், நாளாந்தம் 50 தொடக்கம் 60 பேர் டெங்கு நோயினால் அனுமதிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, கடந்த ஒருமாத காலப்பகுதிக்குள் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ள நாளாந்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 335 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த 25 நாட்களில் 8,728 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 85,216 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 50 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
You must be logged in to post a comment.