அக்காவிடம் தவறாக நடக்க முயற்சி : பொலிஸ் நிலையத்தில் பயங்கரம்..!

தமிழ்நாட்டின் திருவள்ளூர் கண்ணதாசன் நகர் பெரியார் தெருவை சேர்ந்தவர் ராபர்ட் (வயது 48). இவர், திருவள்ளூர் அடுத்த காக்களூர் பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ஒடிட்டராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி வனிதா (43). இவர்களுக்கு யஸ்வந்த் (12) என்ற மகனும், அஸ்வினி (4) என்ற மகளும் உள்ளனர்.

நேற்று காலை காக்களூர் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு வேலை சம்பந்தமாக சென்றார். அந்த நிறுவனத்தில் 25 வயது இளம்பெண் ஒருவர் வேலை செய்து வருகிறார். ‘லிப்டில்’ வந்த அந்த பெண்ணிடம், ராபர்ட் தவறாக நடக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது.

இதுபற்றி அந்த பெண், திருவள்ளூர் அனைத்து மகளிர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கொடுத்தார். அதன்பேரில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து நேற்று மாலை 5 மணிக்கு ராபர்ட்டை வரவழைத்து விசாரணை செய்தனர். விசாரணைக்கு பிறகு இரவு 7 மணிக்கு பொலிசார் இருவரையும் சமரசம் செய்து அனுப்பினர்.

மகளிர் பொலிஸ் நிலையத்தில் இருந்து வெளியே வந்தபோது அங்கு வந்த பாதிக்கபட்ட பெண்ணின் தம்பி மவுலி (23) என்பவர், “எனது அக்காவிடம் தவறாக நடக்க முயன்றாயா?” எனக் கூறி ராபர்ட்டின் தலையில் கையால் பலமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் ஏற்கனவே உடல் நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்டிருந்த ராபர்ட் நிலை தடுமாறி மயங்கி விழுந்தார்.

இதையடுத்து மவுலி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். உடனே அருகில் இருந்த பொதுமக்கள் உடனடியாக ராபர்ட்டை மீட்டு திருவள்ளூர் அரசு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த வைத்தியர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

இதுகுறித்து திருவள்ளூர் டவுன் பொலிசார் கொலை வழக்குப்பதிவு செய்து மவுலியை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். அக்காவிடம் தவறாக நடக்க முயன்ற ஆடிட்டரை தம்பி அடித்துக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles