தெற்கு லெபனானில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ கிராமமான டெபெலில் இஸ்ரேல் இராணுவ வீரர் ஒருவர் இயேசுவின் சிலுவையைச் சேதப்படுத்திய சம்பவம் சர்வதேச அளவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் மற்றும் லெபனான் எல்லைப் பகுதிகளில் பதற்றம் நிலவி வரும் சூழலில், டெபெல் கிராமத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இஸ்ரேல் வீரர் ஒருவர், அங்கிருந்த சிலுவையைச் சேதப்படுத்தும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது. இந்தப் புகைப்படம் வைரலானதைத் தொடர்ந்து, கிறிஸ்தவ அமைப்புகள் மற்றும் பல்வேறு நாடுகள் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றன.
இந்தச் செயலுக்கு அமெரிக்கா மற்றும் சர்வதேச கிறிஸ்தவ மத அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. இதுகுறித்து கத்தோலிக்க திருச்சபை வெளியிட்டுள்ள அறிக்கையில்:
‘இந்தச் செயல் கிறிஸ்தவ நம்பிக்கைக்கு எதிரான அவமதிப்பு மட்டுமல்ல் அடிப்படை மனித விழுமியங்கள் மற்றும் மத நல்லிணக்கத்தின் வீழ்ச்சியைக் காட்டுகிறது.’ எனச் சாடியுள்ளது.
சர்வதேச அளவில் அழுத்தம் அதிகரித்ததைத் தொடர்ந்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இச்சம்பவத்திற்கு அதிகாரப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துள்ளார்.
‘இத்தகைய செயல்கள் யூதப் பண்பாட்டிற்கு முற்றிலும் எதிரானது.’
‘தொடர்புடைய ராணுவ வீரர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர் கண்டிப்பாகத் தண்டிக்கப்படுவார்.’ என அவர் உறுதி அளித்துள்ளார்.
இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. மேலும், சேதப்படுத்தப்பட்ட சிலுவையை மீண்டும் சீரமைக்க முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும், மத அடையாளங்களுக்கு மதிப்பளிக்க வீரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தரப்பில் கூறப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
