ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, பாகிஸ்தான் ராணுவத் தளபதி பீல்டு மார்ஷல் அசிம் முனீரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
கடந்த 8ஆம் திகதி ஈரான் – அமெரிக்கா இடையே போர் நிறுத்தம் அமுல் செய்யப்பட்டது. இந்த இரு வார போர் நிறுத்தம் கடந்த 23ஆம் திகதியுடன் நிறைவடைந்த நிலையில், காலவரையின்றி போர் நிறுத்தத்தை நீடிப்பதாக அன்றைய தினம் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார்.
அமெரிக்கா – ஈரான் இடையே அமைதி ஒப்பந்தத்தை இறுதி செய்ய பாகிஸ்தான் தீவிர முயற்சி செய்து வரும் நிலையில், ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, பாகிஸ்தான் ராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் அசிம் முனீரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
பாகிஸ்தான் வந்த பிறகு அவர் மேற்கொண்ட முதல் அதிகாரப்பூர்வ சந்திப்பு இதுவாகும். இந்த சந்திப்பை அடுத்து, பாகிஸ்தான் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான முகம்மது இஷாக் டர் – அப்பாஸ் அராக்சியை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சந்திப்பின்போது ஈரான் தரப்பில் துணை வெளியுறவு அமைச்சர் காசிம் கிரபாபாடி, தூதர் ரெசா அமிரி மொகாதம், வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். பாகிஸ்தான் தரப்பில் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த சந்திப்பின்போது, அமைதிக்கான அமெரிக்காவின் நிபந்தனைகள் விஷயத்தில் ஈரானின் பதிலை அராக்சி தெரிவித்தார் என கூறப்படுகிறது.
