
முல்லைத்தீவு கேப்பாபிலவு பகுதியில் உள்ள தங்களின் பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு கோரி மக்கள், இராணுவ படைத் தலைமையகத்தின் பிரதான வாயிலுக்கு முன்பாக இன்று போராட்டத்தை முன்னெடுத்தனர்.
கடல், கரை மற்றும் விவசாய நிலங்களை வாழ்வாதாரமாக நம்பியிருந்த கேப்பாபிலவு மக்கள், பாதுகாப்புப் படையின் நடவடிக்கைகளால் தங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தொழில் துறைகள் முடக்கப்பட்டுள்ளதாகவும், கவலை வெளியிட்டனர்.
தொழிலாளர் தினமான நேற்று, தங்களின் பூர்வீக நிலங்களை விடுவித்து, தாயக மண்ணில் வாழ அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கேப்பாபிலவு மக்களுடைய 55 குடும்பங்களின் 59.5 ஏக்கர் மக்கள் குடியிருப்பு காணியும், இராணுவ வசம் உள்ள மிகுதிக் காணியும் என, 171 ஏக்கர் காணி விடுவிக்கப்படவில்லை என மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
