

மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்சு, இரண்டு நாள் அரச பயணம் மேற்கொண்டு இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இலங்கையை வந்தடைந்தார்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரிலேயே இவ்விஜயம் இடம்பெறுகின்றது.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த மாலைதீவு ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினரை, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அமோகமாக வரவேற்றார்.
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன, வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, இலங்கைக்கான மாலைதீவு உயர்ஸ்தானிகர் மசூத் இமாத் மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இலங்கை விமானப் படையினரால் மாலைதீவு ஜனாதிபதிக்கு இதன்போது விசேட மரியாதை வழங்கப்பட்டதுடன், அனைத்து இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சிறுவர், சிறுமியர் இரு நாடுகளினதும் தேசிய கொடிகளை ஏந்தியவாறு வீதியின் இருமருங்கிலும் நின்று மாலைதீவு ஜனாதிபதியை வரவேற்றனர்.
மாலைதீவு – இலங்கை இடையிலான இராஜதந்திர உறவுகளுக்கு 61 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் இந்த விஜயத்தை முன்னிட்டு, மாலைதீவு ஜனாதிபதி விமான நிலையத்தின் விசேட விருந்தினர் பகுதியில் உள்ள நினைவுப் புத்தகத்தில் குறிப்பொன்றையும் இட்டார்.
ஜனாதிபதி முகமது முய்சு, 2023 ஆம் ஆண்டு பதவியேற்றதன் பின்னர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும்.
மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சுவை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நாளை (04) முற்பகல் ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது.
