கடந்த சனிக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில், கோலாலம்பூரின் ஜாலான் அம்பாங் பகுதியில் நிகழ்ந்த வீதி விபத்தில், சொந்த வீடு வாங்கும் கனவில் இருந்த கணவன் – மனைவி இருவரும் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்கள் ஏ.துரைசிங்கம் (வயது 61) அவரது மனைவி ஏ.மேனகா (வயது 56) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது கார் ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. ஆரம்ப கட்ட விசாரணையில், கார் ஓட்டுநர் மது போதையில் இருந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மேனகா ஒரு தனியார் மருத்துவமனையில் 30 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார்.
சொந்தமாக ஒரு வீடு வாங்க வேண்டும் என்பது அவரது வாழ்நாள் கனவாக இருந்தது.
அதற்காக 6 மாதங்களுக்கு முன்புதான் முற்பணம் செலுத்தியிருந்தார். ஆனால், அந்த வீட்டிற்கு குடிபோகும் முன்பே அவர் உயிரிழந்துவிட்டார்.
இந்தத் தம்பதியருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். அவர்களது 24 வயது மகள் பவித்ரா அண்மையில் தான் பட்டப்படிப்பை முடித்திருந்தார்.
தனது பெற்றோரின் ஆசியுடன் பட்டம் பெற்றதை அவர் உருக்கமாக நினைவுகூர்ந்தார்.
இவ்வேளையில், விபத்துக்குக் காரணமான கார் ஓட்டுநர் மற்றும் அதில் இருந்தவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
