பொருளியல் இடையூறுகளும் திகைப்புகளும் ஏற்படக்கூடிய புதிய வழக்கநிலைக்காக ஆசியான், பரந்த, ஆழமான வட்டார ஒத்துழைப்பு வழி தயாராக வேண்டும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங், ஆசியான் உச்சநிலைக் கூட்டத்தின்போது தெரிவித்தார்.
கொவிட்-19, அமெரிக்காவின் வர்த்தக வரிகள், தற்போதைய மத்திய கிழக்குப் பூசல் போன்ற நிகழ்வுகளை எதிர்கொள்ளும் மீள்திறனை இந்நடவடிக்கைகள் அதிகரிக்கும் என்று அவர், 48வது முறையாக நடைபெறும் ஆசியான் உச்சநிலைக் கூட்டத்தின்போது கூறினார்.
இடையூறுகள், திகைப்புகள், கொந்தளிப்புகள் போன்றவை கூடுதல் அளவில் இருக்கும் என்பது எதிர்வரும் உலகப் பொருளியலின் உண்மை நிலை என்று அவர் கூறினார்.
இந்தச் சூழலில் நமது ஒட்டுமொத்த மீள்திறனை அதிகரிக்க ஆசியான் கூடுதலாகச் செய்ய வேண்டும் என்றும் பிரதமர் வோங் கூறினார்.
பிலிப்பீன்சில் தேசிய அளவிலான அவசரநிலை நிலவும் இந்நேரத்தில், மத்திய கிழக்குப் பூசலின் விளைவுகளைப் பற்றிய அம்சங்கள் கலந்துரையாடல்களில் தலையாய அங்கம் வகித்தன.
தங்கள் எரிசக்தித் தேவையில் பெரும்பகுதியை வளைகுடா நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் தென்கிழக்காசிய நாடுகள், ஈரானியப் போர், ஹோர்முஸ் (Hormuz) நீரிணைப் பிரச்சினை ஆகியவற்றால் ஏற்பட்டுள்ள எரிசக்தி விநியோக நெருக்கடியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
மோதலில் குடிமக்களை இழந்த உறுப்பு நாடுகளுக்குப் பிரதமர் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்டார்.
