மலேசியாவின் சுங்கை பட்டானி, பண்டார் ஸ்ரீ அஸ்தானா பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட வீட்டு தீ விபத்தில் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை (JBPM) கெடா செயல்பாட்டு மையம் வெளியிட்ட அறிக்கையில், இன்று அதிகாலை 4.51 மணியளவில் 999 அவசர அழைப்பு மையத்தின் மூலம் தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததாகத் தெரிவித்துள்ளது.
லோரோங் அஸ்தானா பகுதியில் அமைந்திருந்த ஒரு வீடு தீப்பற்றி எரிவதாகத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, சுங்கை பட்டானி தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய அதிகாரிகள், அமான் ஜாயா நிலையத்தினரின் உதவியுடன் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மொத்தம் 22 தீயணைப்பு வீரர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்துக்கு காலை 5.07 மணியளவில் வந்தடைந்த தீயணைப்பு குழுவினர், ஒரு மாடி கொண்ட வகுப்பு A வீடு முழுவதும் தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதை கண்டதாக நடவடிக்கைத் தளபதி மூத்த தீயணைப்பு அதிகாரி முகமட் சாக்கி செனிக் தெரிவித்தார்.
