தமிழக முதலமைச்சராக பதவியேற்றார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று சனிக்கிழமை காலை 10 மணியளவில் பதவியேற்பு விழா தொடங்கியது. வந்தே மாதரம் பாடல் இசைக்க பதவியேற்பு விழா தொடங்கியது. பின்னர் தேசிய கீதம் பாடப்பட்டது, அடுத்து தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டது.
இதனையடுத்து தமிழகத்தின் 18ஆவது முதல்வராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். அதுமட்டுமின்றி, தமிழகத்தின் இளம் வயது முதல்வராகவும் விஜய் பெருமை பெற்றார்.
‘சி.ஜோசப் விஜய் எனும் நான்’ என்று விஜய் உறுதிமொழி கூறியபோது அரங்கம் முழுவதும் நிறைந்திருந்த த.வெ.க தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர்.
மேலும், த.வெ.க. அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களுக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் ஆளுநர் தமிழிசை, கூட்டணி கட்சித் தலைவர்கள், விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர், நடிகை த்ரிஷா, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, விஜய்யின் நண்பர்கள், உறவினர்கள், திரையுலக, அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
விஜய் முதல்வராக அறிவிக்கப்பட்டிருந்தாலும், மே 13 ஆம் திகதிக்குள் சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
