தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதி தொடர்பான கட்டளை எதிர்வரும் 21 ஆம் திகதி மல்லாகம் நீதிவான் நீதிமன்றால் வழங்கப்படவுள்ளது.
பவானி வீதியை விடுவிப்பதற்கு பிரதேச சபை நடவடிக்கை எடுத்துவரும் நிலையில் அந்த முயற்சிகளுக்குத் தடை விதிக்குமாறு பொலிஸார் விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் அளவீடு செய்யப்படவிருந்த நிலையில் அதற்கு காணி உரிமையாளர்கள் ஒத்துழைக்கவில்லை. இந்த நிலையில், விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்ட பவானி வீதியை வலி. வடக்கு தவிசாளர் சோ. சுகிர்தன் அடையாளம் காட்டியிருந்தார்.
இதையடுத்து, அந்த வீதியை இடைமறித்து அமைக்கப்பட்ட எல்லையை அகற்றுமாறும் இல்லையேல் பிரதேச சபை அந்த எல்லையை அகற்றும் என்று தவிசாளர் சுகிர்தனால் தையிட்டி திஸ்ஸ விகாராதிபதி ஜிந்தோட்ட நந்தராம தேரருக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
பிரதேச சபையின் இந்த நடவடிக்கைக்கு எதிராக தையிட்டி விகாராதிபதி பொலிஸில் முறைப்பாடு செய்தார். இந்த முறைப்பாட்டுக்கு அமையவே தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை விடுவிப்பதற்கு பிரதேச சபை நடவடிக்கை எடுத்துவரும் நடவடிக்கைக்குத் தடை விதிக்குமாறு பொலிஸார் நீதிமன்றத்தை நாடினர்.
எனினும்இ பொலிஸாரின் சமர்ப்பணத்தை மட்டும் அடிப்படையாக வைத்து தீர்ப்பு வழங்க நீதிமன்றம் மறுத்தது. இந்த விடயத்தில் வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் சுகிர்தனையும் வலி.வடக்கு பிரதேச சபை செயலாளரையும் இன்று – மே 11ஆம் திகதி முன்னிலையாகுமாறு நீதிமன்று அறிவுறுத்தல் வழங்கியது.
இதன்படி, வலி. வடக்கு பிரதேச சபைத் தவிசாளர் சுகிர்தனின் சார்பில் சட்டத்தரணி சுமந்திரன் முன்னிலையானார்.
‘பொலிஸார் சட்த்தை நடைமுறைப்படுத்த இடையூறுகள் ஏற்பட்டால் அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சட்டத்தை நடைமுறைப்படுத்துகிறபோது பொலிசாரே அதற்கு எதிராக இருப்பது தையிட்டி விகாராதிபதி பௌத்த மதத்தை தழுவுவதால் பொலிஸாரும் பௌத்த பீட கட்டளையை ஏற்பது போன்று சமாதான குறைவை ஏற்படுத்தும் என தொடுக்கப்பட்ட இந்த வழக்கை நீதிமன்றம் முற்றாக நிராகரித்தது.
இந்த வழக்கு தொடர்பிலான கட்டளை எதிர்வரும் 21ஆம் திகதி வழங்கப்படும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மக்களின் காணிகளை ஆக்கிரமித்து யாழ்ப்பாணம் தையிட்டி விகாரை அமைக்கப்பட்டது. இதன் நடுவே பவானி வீதி உள்ளது. அந்த வீதி விடுவிக்கப்படும்பட்சத்தில் பல காணிகள் தாமாகவே விடுவிக்கப்படும் சூழல் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
