திரைப்பட தயாரிப்பாளரும் இயக்குநருமான கே. ராஜன், அடையாறு ஆற்றில் குதித்து இன்று ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு வயது 85.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், கே.ராஜனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கடன் பிரச்னை காரணமாக தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.
தமிழ் சினிமா குறித்து அவ்வபோது சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை கூறி சமூக வலைதளங்களில் பிரபலமான இவர், தமிழ் சினிமாவில் சிறிய பட்ஜெட் படங்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார்.
சென்னை விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவராகவும் பொறுப்பு வகித்த கே.ராஜன், பாம்பு சட்டை, துணிவு, பகாசூரன் உள்ளிட்டப் படங்களில் நடித்துள்ளார்.
1983 ஆம் ஆண்டு பிரம்மச்சாரிகள் படத்தை தயாரித்து தமிழ் சினிமாவில் தனது பயணத்தைத் தொடங்கினார். தொடர்ந்து, அவள் பாவம், நினைக்காத நாளில்லை உள்ளிட்டப் படங்களை தயாரித்துள்ளார்.
இதுமட்டுமின்றி நடிகர் சரத்குமார் – நிழல்கள் ரவி நடித்த நம்ம ஊரு மாரியம்மா, உணர்ச்சிகள் ஆகிய இரு படங்களை இயக்கியுள்ளார்.
1991 ஆம் ஆண்டு வெளியான தங்கமான தங்கச்சி, சின்னப் பூவை கிள்ளாதே ஆகிய இரு படங்களில் எழுத்தாளராவும் பணிபுரிந்துள்ளார்.
நடிப்பின் மீது தீராத ஆர்வம் கொண்ட இவர், 18 படங்களில் பல்வேறு பாத்திரங்களில் நடித்துள்ளார். கே. ராஜன் மறைவுக்கு திரைத் துறையைச் சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
