முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவுநாளின் 17ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று மே 18ஆம் திகதி உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டது.
பிரதான நினைவேந்தல் நிகழ்வு முல்லைத்தீவின் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நடைபெற்றது. இதற்கு சமாந்தரமாக தமிழ் பேசும் மக்களின் தாயகமான வடக்கு, கிழக்கிலும் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் தேசங்களிலும் தமிழ்நாட்டிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
முள்ளிவாய்க்கால் கடற்கரையில் காலையில் பிதிர்க்கடன் மற்றும் மத சடங்குகள் நடைபெற்றன. தொடர்ந்து, முற்பகல் 10.15 மணியளவில் கொள்கை பிரகடனம் வாசிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அகவணக்கம் நடைபெற்று முற்பகல் 10.30 மணியளவில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. சமநேரத்தில் பொதுமக்களும் சுடர்களை ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து, நினைவுமுற்றத்தில் மலர்கள் தூவி மக்கள், அரசியல்வாதிகள், சிவில் சமூகத்தினர் எனப் பலரும் அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்வில் தென்னிலங்கையை சேர்ந்த பொதுமக்கள் சிலரும் அஞ்சலி செலுத்தியிருந்தனர். அஞ்சலியின்போது போரில் உயிரிழந்தவர்களின் உருவப்படங்களை வைத்தும் அந்தப் படங்களுக்கு படையிலிட்டும் கண்ணீர்விட்டு கதறியழுதும் உறவுகள் தமது அஞ்சலியை செலுத்தியிருந்தனர்.
முன்னதாக, வடக்கு, கிழக்கு மாவட்டங்களிலிருந்து மக்கள் பேருந்துகள், மோட்டார் சைக்கிள்களில் ஊர்வலமாக முள்ளிவாய்க்காலை சென்றடைந்தனர். முள்ளிவாய்க்காலுக்கும் செல்லும் வழியிலும் ஏனைய இடங்களிலும் முள்ளிவாய்க்கால் பெரும் ரணத்தை கடத்தும்விதமாக உப்பில்லாத முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது. தன்னார்வலர்கள் பலரும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வை முன்னெடுத்தனர்.
முள்ளிவாய்க்காலில் பிரதான நினைவேந்தல் நடைபெற்றநேரத்தில் வடக்கு, கிழக்கின் பல பாகங்களிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன. யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலும் – தமிழின படுகொலைகள் இடம்பெற்ற இடங்களிலும் நினைவேந்தல் நிகழ்வுகள், முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
இதேபோன்று, தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து வாழும் பிரித்தானியா, கனடா, அவுஸ்திரேலியா, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது. அத்துடன், தமிழ்நாட்டிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
இலங்கையில் உரிமை கேட்டுப் போராடிய தமிழ் மக்கள்மீது அரசாங்கம் வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டது. ஏராளமான தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்துஇ அகிம்சை வழியில் தொடங்கிய உரிமைப் போராட்டம் ஆயுத வழியிலானதாக மாற்றம் பெற்றது. சுமார் 3 தசாப்தங்களாக நீடித்த போரில் அரச படைகள் தமிழ் மக்கள்மீது திட்டமிட்ட படுகொலைகளை காலத்துக்குக் காலம் கட்டவிழ்த்துவிட்டன. இறுதிப் போர் என்றழைக்கப்படும் நான்காம் கட்ட ஈழப்போரின்போது வகைதொகையின்றி மக்கள் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு வலயங்கள் என்று அறிவித்துவிட்டும் அங்கும் மக்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்டனர். இறுதியில், முள்ளிவாய்க்காலில் 2009 மே 18ஆம்நாளுடன் போர் மௌனிக்கப்பட்டது. இந்த நாளை தமிழ் மக்கள் தமிழின அழிப்பு நாளாக நினைகூர்ந்து வருகின்றனர் என்பது தெரிந்ததே.

