எனது ஆட்சியின் கீழ் எந்தவொரு நிலையிலும் பிரிவினைவாதத்துக்கு இடமளிக்கப்பட மாட்டாது. இனி ஒருபோதும் இந்த நாட்டில் யுத்தம் என்ற ஒன்று ஏற்படாது செய்வதே எனது அரசாங்கத்தின் இலக்கு. இரத்த வெள்ளத்தாலோ அல்லது வெடிகுண்டுகளாலோ நாட்டை கட்டியெழுப்ப முடியாது, அமைதியால் மட்டுமே அபிவிருத்தியடைந்த நாட்டை உருவாக்க முடியும் இவ்வாறு ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று மே 19ஆம் திகதி 17ஆவது தேசிய வீரர்கள் தின நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
மேலும், தமக்காக அன்றி ஏனையோருக்காகவும் நாட்டின் அமைதிக்காகவும் தமது உயிரை தியாயகம் செய்த இராணுவ வீரர்களுக்கும் அவர்களை நாட்டுக்காக அர்ப்பணித்த பெற்றோருக்கும் நாடு என்ற ரீதியில் எமது கௌரவத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம். நாட்டின் பாதுகாப்பையும் அமைதியையும் உறுதிப்படுத்துவதற்காகவே ஆயிரக்கணக்கான வீரர்கள் தமது உயிரை தியாகம் செய்தனர்.
அவர்களில் யுத்தம் செய்தமைக்கான நோக்கம் அமைதியான நாடு, அபிவிருத்தியடைந்த நாடு மற்றும் உலகில் வெற்றி பெறும் நாடு என்பதாகும். இவை அனைத்தையும் கொண்ட இலங்கையை நானும் எனது அரசாங்கமும் உருவாக்குவோம் என்று உறுதியளிக்கின்றேன். இவற்றில் எந்தவொரு விடயமும் எக்காரணத்துக்காகவும் கைவிடப்பட மாட்டாது. எவ்வாறிருப்பினும் அவர்களது அர்ப்பணிப்பை இவ்வாறு நினைவு கூருதல் மாத்திரம் போதாது.
அவர்களது இறுதி இலக்கான ஒற்றுமையான நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும். தற்போது நாட்டில் ஒற்றுமையை விரும்பாத ஒரு பாiதையும் ஒற்றுமையை அங்கீகரிக்கும் மற்றொரு பாதையும் காணப்படுகிறது. எதிர்காலத்தில் எவ்வாறான சவால்களை எதிர்கொண்டாலும் நாம் இரண்டாவது பாதையை மாத்திரமே தெரிவு செய்வோம். தற்போது சர்வதேசத்தின் மத்தியில் இலங்கையின் நற்பெயரை ஸ்திரப்படுத்தியிருக்கிறோம்.
இராணுவத்தினர் பிரிவினை வாதத்துக்கு எதிராகவே போராடினர். மாறாக மக்களுக்கு எதிராகவோ அல்லது குறிப்பிட்டவொரு இனத்துக்கு எதிராகவோ அல்ல. வடக்கு மற்றும் தெற்கில் அரசியல் இலாபம் தேட முற்பட்டவர்களால்தான் இந்த பேரழிவை நாடு எதிர்கொள்ள நேர்ந்தது. இன்றைய சமூகத்தில் யுத்தம் சரியானதா இல்லையா என்ற விவாதமொன்று காணப்படுகிறது. ஆனால், எமது விவாதம் இனியொருபோதும் இந்த நாட்டில் யுத்தம் என்ற ஒன்று ஏற்படாமலிருப்பதை உறுதிப்படுத்துவதாகவும் எனது ஆட்சியின் கீழ் எந்தவொரு நிலையிலும் பிரிவினைவாதத்துக்கு ஒரு போதும் இடமளிக்கப்பட மாட்டாது. சகல மக்களதும் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டு, சட்டம் அனைவருக்கும் சமமானதாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் – என்றார்.
