GSF மனிதாபிமான நிறுவன கப்பலில் பயணித்த 16 மலேசியர்களை இஸ்ரேல் தடுத்து வைத்திருப்பது குறித்து பிரதமர் அன்வார் இப்ராஹிம் இஸ்ரேலைக் கடுமையாகச் சாடியுள்ளார்.
அவர்களின் தடுப்புக்காவல் மனித உரிமைகளுக்கும் சர்வதேச கடல்சார் சட்டத்திற்கும் எதிரான அவமதிப்பு என்று அன்வார் கூறினார்.
இஸ்ரேலின் நடவடிக்கைகளை மலேசியா வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும், அவர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கவும், தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து ஆர்வலர்களையும் உடனடியாக விடுவிக்கவும் மலேசியா கோருகிறது என்று அவர் கூறினார்.
உதவிக்கான வழிகளை மூடுவதிலும், மனிதாபிமானத்திற்காகக் குரல் கொடுப்பவர்களை ஒடுக்குவதிலும், பாலஸ்தீனியர்களின் அவல நிலையை ஆதரிப்பவர்களைத் துன்புறுத்துவதிலும் சியோனிச ஆட்சியின் தீய செயல்களை இந்த நடவடிக்கைகள் பிரதிபலிக்கின்றன என்று அவர் தெரிவித்தார்.
பாலஸ்தீனியர்களுக்கு எதிராகவும், அவர்களுக்கு மனிதாபிமான உதவிகளை விநியோகிக்க முயற்சிப்பவர்களுக்கு எதிராகவும் இழைக்கப்படும் அட்டூழியங்கள் குறித்து உலகம் மௌனமாக இருக்க முடியாது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
இஸ்ரேல் பொறுப்பேற்க வைக்கப்பட்டு, நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
மலேசிய நேரப்படி நேற்று இரவு 8 மணி நிலவரப்படி, 16 மலேசியர்களை ஏற்றிச் சென்ற GSFஐசேர்ந்த ஒன்பது கப்பல்கள் இஸ்ரேலியப் படைகளால் இடைமறிக்கப்பட்டதை சுமுத் நுசந்தாரா கட்டளை மையம் (SNCC) உறுதிப்படுத்தியது.
