கனடாவில் தகாத முறையில் நடந்து கொண்ட ஆசிரியை ஓருவருக்கு பதினைந்து ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர் ஒருவருக்கு பாலியல் ரீதியான தூண்டல்மிக்க வீடியோவை அனுப்பி, ‘குழந்தைகளைக் கவர்ந்திழுத்தல்’ (Child Luring) குற்றச்சாட்டின் கீழ் தண்டனைப் பெற்ற பிரிட்டிஷ் கொலம்பியாவின் முன்னாள் பள்ளி ஆசிரியை ஒருவர், அடுத்த 15 ஆண்டுகளுக்கு ஆசிரியப் பணியில் ஈடுபடக் கூடாது என்ற உடன்படிக்கைக்குச் சம்மதித்துள்ளார்.
மாகாணத்தின் ஆசிரியர் ஒழுங்குமுறை ஆணையத்தால் வெளியிடப்பட்ட சமரசத் தீர்மான ஒப்பந்தத்தின் மூலம் இத்தகவல் வெளியாகியுள்ளது.
வான்கூவர் தீவுப் பகுதியைச் சேர்ந்த கெல்சி மேக்ரே பிளேக் என்ற ஆசிரியரின் இந்த ஒழுங்கீனச் செயல் குறித்து, பள்ளி நிர்வாகம் ஆசிரியர் ஒழுங்குமுறை ஆணையாளரிடம் புகார் அளித்து இரண்டு ஆண்டுகளுக்கும் மேலான நிலையில், இந்த உடன்படிக்கை கடந்த மே 5ஆம் திகதி கையெழுத்தாகியுள்ளது.
ஒப்பந்தத்தின்படி, ஆசிரியை பிளேக் தான் பணிபுரிந்த பள்ளியின் மாணவர் ஒருவருக்கு பாலியல் தூண்டல்மிக்க வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளார். இதனைத் தொடர்ந்து சிறுவர் ஒருவருக்கு எதிரான நான்கு பாலியல் குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
2023 ஜனவரி 5ம் திகதி ஆசிரியை பிளேக் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார். 2023 ஜனவரி 13ம் திகதி பள்ளி மாவட்ட நிர்வாகத்தால் அவர் முறைப்படி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
2025 ஏப்ரல் 23ம் திகதி 18 வயதுக்குட்பட்ட குழந்தையைக் கவர்ந்திழுப்பதற்காகத் தொலைத்தொடர்புச் சாதனத்தைப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் பிளேக் குற்றவாளியாகக் காணப்பட்டார்.
போர்ட் ஹார்டி நீதிமன்றத்தில் அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, மற்ற மூன்று குற்றச்சாட்டுகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன.
முன்னதாக, 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதமே வருடாந்திர பயிற்சி்க் கட்டணத்தைச் செலுத்தாததால் பிளேக்கின் கற்பித்தல் சான்றிதழ் ரத்து செய்யப்பட்டிருந்தது.
தற்போதைய புதிய உடன்படிக்கையின்படி, பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள மழலையர் பள்ளி முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குக் கற்பிப்பதற்கான எந்தவொரு சான்றிதழுக்கோ அல்லது அங்கீகாரத்திற்கோ அடுத்த 15 ஆண்டுகளுக்கு விண்ணப்பிப்பதில்லை என பிளேக் ஒப்புக்கொண்டுள்ளார்.
