கால்களை இழந்தும், கைகளால் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி உலக சாதனை படைத்த வீரர்
தனது இரு கால்களையும் இழந்த, ரஷ்யாவின் முன்னாள் இராணுவ வீரரான ருஸ்தம் நபியேவ், கைகளை மட்டுமே பயன்படுத்தி எவரெஸ்ட்டை அடைந்து, மனித வரலாற்றிலேயே புதியதொரு சாதனை படைத்துள்ளார்.
கடந்த 2015ஆம் ஆண்டில் ஏற்பட்ட விபத்தொன்றில் தனது இரு கால்களையும் இழந்த நபியேவ், நேபாளத்தில் தற்பொழுது நடைபெற்று வரும் வசந்தகால மலையேற்றப் பருவத்தில், கடந்த புதன்கிழமை (20) காலை எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை வெற்றிகரமாகச் சென்றடைந்தார்.
இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் ருஸ்தம் நபியேவ், பதிவு செய்த பின்னர், எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் நின்றவாறு “வீழ்ச்சிக்குப் பிறகு வாழ்க்கை முடிந்துவிட்டது என்று நினைத்தவர்களுக்கு எவரெஸ்ட் 2026” என்ற வாசகம் அடங்கிய பலகையை ஏந்தியபடி அவர் தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
“மே 20ஆம் திகதி, நேபாள நேரப்படி காலை 8:16 மணிக்கு, மலையேற்ற வரலாற்றிலும் மனித வரலாற்றிலும் முதல் முறையாக, நான் (ருஸ்தம் நபியேவ்) எனது கைகளை மட்டுமே பயன்படுத்தி எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தேன். என்னைக் கண்காணித்துக்கொண்டிருக்கும் அனைவருக்கும் இந்த வெற்றியைச் சமர்ப்பிக்கிறேன்.
“இந்தச் செயலின் மூலம் நான் கூற விரும்புவது ஒன்றே ஒன்றுதான். உங்களில் உயிர் இருக்கும் வரை போராடுங்கள்! தயவுசெய்து இறுதி வரை போராடுங்கள் அது உண்மையிலேயே மதிப்புமிக்கது!” என்று அதில் தன்னம்பிக்கையோடு பதிவிட்டுள்ளார்.
