நாட்டில் விலங்கு நலத்துறைக்கு ஒரு முன்மாதிரியாகத் திகழும் பினாங்கு மாநகர மன்றம்> தெருநாய்களைக் கொல்லாத ‘zero-kill’ கொள்கையை 8 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி சாதனை படைத்துள்ளது.
கடந்த 2018-ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்ட இந்த ‘பிடித்தல்-கருத்தடை செய்தல்-விடுவித்தல்’ (TNR) திட்டத்தின் கீழ், MBPPயும் விலங்குகள் பாதுகாப்பு மற்றும் நலனுக்கான சயேட்சை உதவி அமைப்பான ‘IAPWA’-வும் இணைந்து இதுவரை 8,484 தெருநாய்களுக்குக் கருத்தடை செய்துள்ளன.
மேலும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாய்கள் புதிய உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்த ஒத்துழைப்பை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் ஒப்பந்த விழாவில் பேசிய பினாங்கு மாநகர மேயர் டத்தோ ஏ. ராஜேந்திரன், தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த இந்த முறை மிகவும் மனிதாபிமானமிக்க மற்றும் பயனுள்ள ஒரு வழிமுறை எனக் குறிப்பிட்டார்.
இந்தத் திட்டத்திற்கு ஆதரவாக, MBPP 100,000 ரிங்கிட் நிதியுதவி வழங்கியுள்ளது.
அதோடு, Pentamaster மற்றும் Greatech Technology ஆகிய நிறுவனங்கள் தலா 100,000 ரிங்கிட் நன்கொடை வழங்கியுள்ளன.
இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த மாதத்திற்கு 70,000 ரிங்கிட் வரை செலவாவதாகக் குறிப்பிட்டுள்ள IAPWA அமைப்பு, பொது மக்களின் ஆதரவையும் தன்னார்வலர்களின் பங்களிப்பையும் கோரியுள்ளது.
அதே வேளையில், நாய் வளர்ப்பவர்கள் ஆண்டுக்கு 10 ரிங்கிட் கட்டணத்தில் தங்கள் செல்லப்பிராணிகளை இணையம் வாயிலாகப் பதிவுச் செய்யுமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
