‘மகாநாயக்க தேரர்கள் கூறும் கருத்துகளையும் எடுக்கும் முடிவுகளையும் நாம் முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும். அது சரியா தவறா என்பது குறித்து நாம் கேள்வி எழுப்ப முடியாது’ என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பு – கொஹூவல, வுட்லண்ட் மாவத்தையில் அமைந்துள்ள சிறி சுமணராம விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ‘தாது மந்திர்’ திறப்பு விழாவில் கலந்து கொண்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இந்த வருடம் மே மாதத்தில் இரண்டு வெசாக் போயா தினங்கள் வருவது தொடர்பாக பௌத்த சமூகத்திலும் அரசியல் வட்டாரங்களிலும் எழுந்துள்ள சர்ச்சைகள் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர்,
‘மகாநாயக்க தேரர்கள் ஒரு விவகாரம் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுத்திருந்தால், அதனை நாம் தலைவணங்கி ஏற்றுக்கொள்ள வேண்டும். அதில் தர்க்கங்களுக்கு இடமில்லை – என்றார்.
மேலும், இம்முறை வெசாக் தினக் கொண்டாட்டம் தொடர்பில் வினவியபோது, ‘நான் எப்போதும் போல சாதாரணமான முறையிலேயே இம்முறையும் வெசாக் தினத்தைக் கொண்டாடவுள்ளேன்’ என்றும் குறிப்பிட்டார்.
