அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் கனடாவுக்கு கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.a
அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகள் இணைந்து கையெழுத்திட்டுள்ள வர்த்தக ஒப்பந்தத்தை புதுப்பிக்கவோ அல்லது தொடரவோ வேண்டாம் என அவர் எச்சரித்துள்ளார் என்று கூறப்படுகிறது.
இந்த ஒப்பந்தம் முதன்முறையாக ட்ரம்ப் ஜனாதிபதியாக இருந்த காலத்தில்இ 2018ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்டது. இது மூன்று நாடுகளுக்கிடையிலான வர்த்தகத்தைப் பாதுகாக்கும் முக்கிய ஒப்பந்தமாகும்.
இந்நிலையில், எதிர்வரும் ஜூலை 1ஆம் திகதி இந்த ஒப்பந்தம் மீளாய்வுக்கு வரவுள்ள நிலையில், அதிலிருந்து அமெரிக்கா வெளியேறக்கூடும் என ட்ரம்ப் தெரிவித்திருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக இணைப்பது போன்ற கருத்துகளையும் கூடுதல் வரிகள் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளையும் ட்ரம்ப் முன்வைத்திருந்தார்.
கனடாவின் பொருளாதாரத்துக்கு இந்த ஒப்பந்தம் மிக முக்கியமானதாகும். சுமார் ஒரு இலட்சத்து 30 ஆயிரம் கோடி டொலர் மதிப்பிலான வர்த்தகம் இந்த ஒப்பந்தத்தின் கீழ் பாதுகாக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அறிவிப்பு வட அமெரிக்க வர்த்தக உறவுகளில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
