யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட குளங்களைத் தூர்வாரும் செயல் திட்டத்தை இந்த ஆண்டு மீண்டும் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
கடந்த ஆண்டு கந்தரோடைக் குளத்தில் மேற்கொள்ளப்பட்ட தூர்வாரும் செயற்பாட்டின் மூலம் ஏற்பட்ட சாதகமான விளைவுகள் மற்றும் எதிர்கொண்ட சவால்கள் குறித்து இதில் விரிவாக ஆராயப்பட்டது.
அத்துடன்இ இந்த ஆண்டு கமநல சேவைகள் திணைக்களத்தின் மூலம் தூர்வாரப்பட வேண்டிய குளங்களை அடையாளப்படுத்தி, அவற்றுக்கான அனுமதிகளை விரைவாகப் பெற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழுக்கையாற்றுப் பகுதியில் உள்ள குளங்களை தூர்வாரும் பணிகள் மற்றும் அவற்றை உள்ளூராட்சி மன்றங்களின் ஊடாக முன்னெடுப்பது குறித்தும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
மேலும், ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்ட சில குளங்களில் தூர்வாரும் பணிகளை உடனடியாக ஆரம்பிக்க நிலஅளவைத் திணைக்களத்தின் ஒத்துழைப்பும் பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்துவதற்காக சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களின் பங்கேற்புடன் மேலும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
