அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் நீடித்து வரும் பதற்ற நிலையைத் தணிக்கும் நோக்கில் அமைதி ஒப்பந்தத்திற்கான கட்டமைப்பு உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த உன்பாடு அதிகாரபூர்வமாக கைச்சாத்தாகும் நிகழ்வு எதிர்வரும் வெள்ளிக்கிழமை சுவிற்சர்லாந்தில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச ஊடகங்களின் தகவல்களின்படி,
ஆரம்பகட்ட இணக்கப்பாட்டின் கீழ் இரு நாடுகளும் அடுத்த 60 நாட்களுக்குள் மேலதிக பேச்சுகளை முன்னெடுத்து, இறுதி ஒப்பந்தம் ஒன்றை எட்டுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளன.
உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தை வழமை நிலைக்குக் கொண்டுவருவதும், ஈரானுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள சில பொருளாதாரக் கட்டுப்பாடுகளில் தளர்வுகளை வழங்கவும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, வெளிநாடுகளில் முடக்கப்பட்டுள்ள ஈரானின் சொத்துகளில் ஒரு பகுதியை விடுவிப்பது தொடர்பிலும் பேச்சுகள் இடம்பெற்றுள்ளன என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், ஈரானின் அணுசக்தித் திட்டம் தொடர்பான முக்கிய கருத்து வேறுபாடுகள் தொடர்கின்றன. செறிவூட்டப்பட்ட யுரேனியக் கையிருப்பு தொடர்பில் அமெரிக்காவும் ஈரானும் இன்னும் இறுதி இணக்கப்பாட்டை எட்டவில்லை எனக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், எந்தவோர் இறுதி முடிவும் இன்னும் எடுக்கப்படவில்லை என ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாட்டின் தேசிய நலன்கள் மற்றும் கொள்கை நிலைப்பாடுகளுக்கு முரணான எந்தவொரு உடன்பாட்டையும் ஏற்க முடியாது என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மத்திய கிழக்கில் அண்மைக்காலமாக அதிகரித்துள்ள பதற்ற சூழ்நிலைக்கு மத்தியில் வெளியாகியுள்ள இந்த முன்னேற்றம், பிராந்தியத்தில் நிலவும் அச்சநிலையைத் தணிக்கும் முக்கிய நகர்வாக அரசியல் அவதானிகளால் பார்க்கப்படுகிறது.
