மலேசியாவின் கெடா மாநிலத்தின் குருண் பகுதியில் அமைந்துள்ள ‘கெம் ஹோபார்ட்’ இராணுவ முகாமில் நடைபெற்ற பயிற்சியின் போது இடம்பெற்ற குண்டு வெடிப்பில் இரண்டு இராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.. குண்டுவெடிப்பில் படுகாயமடைந்த அந்த ஆண் மற்றும் பெண் இராணுவ வீரர்கள் இருவரும், உடனடியாகச் சுங்கை பட்டானியில் உள்ள சுல்தான் அப்துல் ஹலிம் மருத்துவமனைக்கு அவசர அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டனர்.
இருப்பினும், அவர்கள் இருவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்ததனர் என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்விபத்து குறித்துக் கோலா மூடா மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். இன்று மதியம் 12:30 மணியளவில் இந்த விபத்து மற்றும் உயிரிழப்பு குறித்துக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
துப்பாக்கி சுடும் தளம் மற்றும் வெடிமருந்துப் பயிற்சிப் பகுதியில் இந்த விபத்து எப்படி நேர்ந்தது, வெடிபொருள் கையாண்டதில் ஏதேனும் தொழில்நுட்பக் குறைபாடுகள் உள்ளதா என்பது குறித்து இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் பொலிஸார் தற்போது தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
