தெற்கு கலிபோர்னியாவின் மொஜாவே பாலைவனத்தில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளத்தில், பி-52 ரக குண்டுவீச்சு விமானம் ஒன்று புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளாகித் தீப்பிடித்து எரிந்ததில், அதில் பயணம் செய்த 8 பேரும் உயிரிழந்தனர் என இராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
லொஸ் ஏஞ்சல்ஸுக்கு வடக்கே அமைந்துள்ள எட்வர்ட்ஸ் விமானப்படைத் தளத்தில், வழக்கமான சோதனைப் பயணத்தின்போது விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான விமானத்தின் பாகங்கள் எதுவும் கிடைக்கவில்லை.
விமானத்தில் இருந்தவர்களில் அரசு ஒப்பந்தத பணியாளர்கள், சீருடை அணிந்த இராணுவத்தினரும் அடங்குவர்.
விபத்து தொடர்பான காணொளிக் காட்சிகளை ஆய்வு செய்ததில், இதில் எவரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்பது உறுதி செய்யப்பட்டதாக எட்வர்ட்ஸ் தளத்தில் உள்ள 412ஆவது சோதனைப் பிரிவின் ராணுவ துணைத் தளபதி கேணல் ஜேம்ஸ் ஹேய்ஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
“நாங்கள் 8 சிறந்த அமெரிக்கர்களை இழந்துவிட்டோம்” என்று கூறிய ஹேய்ஸ், அவர்களின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டார்.
விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவரவில்லை என்றும், இது குறித்த விசாரணையை நிறைவு செய்ய 6 மாதங்கள் வரை ஆகலாம் என்றும் ஹேய்ஸ் கூறினார்.
1950ஆம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட பி-52 குண்டு வீச்சு விமானங்கள், அமெரிக்கப் படைகளால் பயன்படுத்தப்படுகிறது. இது, வியட்நாம் முதல் ஈரான் வரையிலான அமெரிக்க இராணுவத்தின் தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
