துருக்கியின் தலைநகர் அங்காராவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நேட்டோ உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, ஒரு வலுவான பாதுகாப்புப் பங்களிப்பை உருவாக்குவதற்கான அர்ப்பணிப்பை ஐரோப்பியத் தலைவர்கள் புதன்கிழமை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உடனான கருத்து வேறுபாடுகள் மற்றும் பதற்றங்களுக்கு மத்தியிலேயே ஐரோப்பியத் தலைவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.
பிரித்தானியா, பிரான்ஸ், இத்தாலி மற்றும் போலந்து ஆகிய நாடுகளின் தலைவர்களைப் பெர்லின் நகருக்கு அழைத்திருந்த ஜேர்மன் அதிபர் ஜூலை 7, 8 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள நேட்டோ மாநாடானது, தற்காப்புத் துறையில் ஐரோப்பா வலுவான தலைமைப் பாத்திரத்தை ஏற்பதற்கான உறுதியை வெளிப்படுத்தும் தருணமாக அமையும் என்று கூறினார்.
தலைவர்கள் இரவு விருந்திற்கு முன்னதாக சுருக்கமான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட போது,
“நாங்கள் நேட்டோ கூட்டணியைப் புதுப்பிக்க விரும்புகிறோம். அதன் ஐரோப்பிய தூணை நாங்கள் வலுப்படுத்துகிறோம்” என்று ஜேர்மன் அதிபர் மெர்ஸ் குறிப்பிட்டார்.
இச்சந்திப்பைத் தொடர்ந்து வெளியான கூட்டு அறிக்கை, “யூரோ-அட்லாண்டிக் பாதுகாப்பு மற்றும் அட்லாண்டிக் நாடுகளுக்கு இடையிலான பிணைப்பிற்கான தங்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை” உறுதிப்படுத்தியது.
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போருக்கு ஆதரவளிக்க நேட்டோ கூட்டணி தயக்கம் காட்டியதாக கடந்த சில மாதங்களாக ட்ரம்ப் விமர்சித்துவருகின்றார்.
மேலும் ஐரோப்பாவில் உள்ள தனது படைகளைக் குறைத்துக் கொள்ளப் போவதாகவும் அமெரிக்கா அச்சுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, ஐரோப்பாவுடனான உறவுகளை வலுப்படுத்த உழைத்த பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மருக்கு ஐரோப்பியத் தலைவர்கள் தங்களது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.
தனது கட்சியில் அதிகரித்து வரும் அதிருப்திக்கு மத்தியில், அவர் இந்த வாரம் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து இந்த விடைபெறுதல் நிகழ்ந்தது.
