சிங்கப்பூர் குடியுரிமை பெற்ற செல்வந்தர் ஒருவருக்குப் பங்களாதேஷ் நீதிமன்றம் ஐந்து மாதச் சிறைத் தண்டனை விதித்துள்ளது.
நிதித் தொடர்பான குற்றத்திற்காக விதிக்கப்பட்ட அந்தத் தண்டனை செல்லாது என்றும் நீதிக்குப் புறம்பானது என்றும் அந்தச் செலவந்தரின் வழக்கறிஞர்கள் வாதாடினர்.
66 வயது சைஃபுல் ஆலம் மசூத், அவரது 54 வயது மனைவி ஃபர்சானா பர்வீன், அவர்களின் 32 வயது மகன் அசனுல் ஆலம் ஆகிய மூவருக்கும் சாட்டோகிராமில் கடந்த மே மாதம் தண்டனை விதிக்கப்பட்டது.
அவர்கள் பங்களாதேஷில் உள்ள இஸ்லாமி வங்கியிடமிருந்து வாங்கிய 84.49 கோடி டாக்காவைத் (S$8.8 மில்லியன்) திரும்பத் தராமல் இருந்தனர் என்று கூறப்படுகிறது.
தண்டனை விதிக்கப்பட்ட மூவரும் சிங்கப்பூரர்கள். சட்டோகிராமில் பிறந்த அலாமும் அவரது மனைவியும் 2011ஆம் ஆண்டு சிங்கப்பூர் நிரந்தரவாசிகளாகி, பின் 2023ஆம் ஆண்டு குடியுரிமைப் பெற்றனர்.
இந்நிலையில், சிங்கப்பூரின் வோங் பார்ட்னர்ஷிப் நிறுவனத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் அலாமைப் பிரதிநிதிக்கின்றனர்.
அவர்கள், ஆலம், அவரது மனைவி பர்வீனும், அவர்களின் மகன் அசனுல் ஆலம் ஆகிய மூவரும் நீதிமன்றத்தில் முன்னிலையாகாமலேயே தண்டனைகளைப் பெற்றுள்ளதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தனர்.
தண்டனை குறித்து ஊடகங்கள்வழியாகத்தான் ஆலம் அறிந்துகொண்டதாகக் குறிப்பிட்ட அவர்கள், முறையாக அறிவிக்கப்படாததால் வழக்கு விசாரணையிலும் அவரால் ஈடுபட முடியாமல் போனது என்றனர்.
