நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் இருதரப்பினரிடையே இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் ஏற்பட்ட பயங்கர வன்முறை மோதலில் இரு கைதிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இன்று மதியம் சிறைச்சாலை வளாகத்துக்குள் கைதிகள் இரு பிரிவாகப் பிரிந்து பயங்கரமாக மோதிக்கொண்டனர். இந்த வன்முறைச் சம்பவத்தில் படுகாயமடைந்த 30 கைதிகள் உடனடியாக மீட்கப்பட்டு நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இவர்களில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த இரு கைதிகளே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என்று வைத்தியசாலை மற்றும் சிறைச்சாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
சிறைச்சாலை வளாகத்துக்குள் கைதிகளுக்கு இடையே திடீரென இவ்வாறானதொரு பாரதூரமான வன்முறை மோதல் வெடிப்பதற்கான துல்லியமான மற்றும் பின்னணிக் காரணங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை.
தற்போது காயமடைந்த ஏனைய 28 கைதிகளுக்கும் நீர்கொழும்பு வைத்தியசாலையில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
சிறைச்சாலைக்குள் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட இந்த மோதலைக் கட்டுப்படுத்தி, நிலைமையை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காகப் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் துரிதமாகக் களமிறக்கப்பட்டு சிறைச்சாலை மற்றும் வைத்தியசாலைப் பகுதிகள் முற்றுகையிடப்பட்டுப் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தப் பயங்கரச் சம்பவம் மற்றும் சிறைச்சாலைக்குள் ஆயுதங்கள் ஊடுருவிய விதம் தொடர்பில் சிறைச்சாலை உயர் அதிகாரிகளும் பொலிஸாரும் இணைந்து கூட்டு விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
