நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட பாரிய மோதலைத் தொடர்ந்து, அங்கிருந்த கைதிகளில் ஒரு தொகுதியினர் கண்டி, பல்லேகலையில் அமைந்துள்ள போகம்பர திறந்தவெளி சிறைச்சாலைக்கு அவசரமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன்,விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கும், ஏற்கனவே தண்டனை பெற்று சிறையிலடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கும் இடையே நேற்று ( 05) இடம்பெற்ற திடீர் மோதல் இன்று (06) கடுமையான வன்முறையாக தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காகவே, கைதிகள் சிலரை உடனடியாக போகம்பர சிறைச்சாலைக்கு மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட இந்த வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 30 ஆக உயர்ந்துள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார, உயிரிழந்தவர்களில் 8 சிறைச்சாலை அதிகாரிகளும் உள்ளடங்குவதாக மிகுந்த கவலையுடன் உறுதிப்படுத்தியுள்ளார்.
தற்போது சிறைச்சாலை வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸாரும் பாதுகாப்புப் பிரிவினரும் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றனர்.
