ஈரானின், மறைந்த ஆன்மீக தலைவர் கமேனியின் மூன்று மகன்கள் முதன்முறையாகப் பொதுவெளியில் தோன்றியுள்ளனர்.
அமெரிக்க – இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் ஆன்மீக மற்றும் உச்ச தலைவரான அயத்துல்லா அலி கமேனியின் உடல், தலைநகர் தெஹ்ரானில் உள்ள பிரமாண்ட மொசல்லா வளாகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
லட்சக்கணக்கான மக்கள் திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வரும் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இறுதிச்சடங்கில், கமேனியின் மூன்று மகன்கள் முதன்முறையாகப் பொதுவெளியில் தோன்றியுள்ளனர்.
இருப்பினும், தந்தையின் மரணத்திற்குப் பிறகு ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்றுள்ள அவரது மற்றொரு மகனான மொஜ்தபா கமேனி (Mojtaba Khamenei) இந்த இறுதிப் பிரார்த்தனையில் கலந்துகொள்ளாதமை சர்வதேச அளவில் பெரும் விவாதங்களை எழுப்பியுள்ளது.
கடந்த பெப்ரவரி 28 அன்று நடைபெற்ற பயங்கர குண்டுவெடிப்பில் 86 வயதான அலி கமேனி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானில் நிலவும் போர்ச் சூழலால் இந்த இறுதிச்சடங்குகள் பல மாதங்கள் தள்ளிப்போயின.
தற்போது ஆறு நாட்கள் நடைபெறும் இந்த இறுதி ஊர்வலத்தின் இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று, கமேனியின் மகன்களான முஸ்தபா, மசூத் மற்றும் மீசம் ஆகிய மூவரும் தங்களின் தந்தையின் சவப்பெட்டிக்கு அருகில் நின்று பிரார்த்தனை செய்தனர்.
ஆனால், ஈரானின் ஒட்டுமொத்த அதிகாரத்தையும் தன் கையில் வைத்துள்ள புதிய தலைவர் மொஜ்தபா கமேனி இன்னும் ஒருமுறை கூட பொதுமக்களின் பார்வைக்கோ அல்லது ஊடகங்களின் கேமராக்களிலோ சிக்காமல் முற்றிலும் தலைமறைவாகவே உள்ளார்.
தனது தந்தை கொல்லப்பட்ட அதே பெப்ரவரி மாத தாக்குதலில் மொஜ்தபா கமேனியும் படுகாயமடைந்ததாகவும், அவரது முகம் மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவர் தீவிர சிகிச்சையில் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
மற்றொரு புறம், இஸ்ரேலிய உளவு அமைப்புகள் அவரையும் குறிவைத்துத் தாக்கக்கூடும் என்ற பாதுகாப்பு அச்சம் காரணமாக, அவர் ரகசிய பதுங்கு குழியில் இருந்துகொண்டு வெறும் எழுத்துப்பூர்வமான அறிக்கைகள் மூலம் மட்டுமே ஈரானை வழிநடத்தி வருகிறார் என்றும் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர் .
இந்த இறுதிச்சடங்கில் கமேனியின் சவப்பெட்டியுடன், அதே தாக்குதலில் பலியான அவரது மகள், மருமகன் மற்றும் 14 மாதக் பேர்த்தி ஆகியோரின் உடல்களும் ஒன்றாக அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளன.
ஈரானின் இந்த மாபெரும் துயர நிகழ்வைக் குறிக்கும் வகையில் நாடு முழுவதும் அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதுடன், கமேனியின் இறுதி ஊர்வலத்தை ஒட்டி வான்வெளி மற்றும் சாலைப் போக்குவரத்துகள் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் புதிய தலைவர் மொஜ்தபா இறுதிநாளில் தோன்றுவாரா அல்லது ஈரானின் ஆயுதப்படையான இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) நாட்டின் முழு கட்டுப்பாட்டையும் மறைமுகமாக இயக்குகிறதா என்ற சந்தேகம் உலக நாடுகளிடையே எழுந்துள்ளது
