ஈரான் முன்னாள் உச்சத் தலைவர் அலி கமேனியின் படுகொலைக்குப் பழிவாங்கும் நடவடிக்கையாகக் குறிவைக்கப்பட வேண்டிய தலைவர்களின் பட்டியலை ஈரானின் செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த தலைவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்தியக் கிழக்கில் நடைபெற்ற போரில் அமெரிக்கா – இஸ்ரேல் இணைந்து நடத்தியத் தாக்குதல்களில் முதல் நாளே உச்சத் தலைவர் கமேனி கொல்லப்பட்டார். அவரது மகனும், தற்போதைய ஈரானின் உச்சத் தலைவருமான மொஜ்தபா கமேனி தந்தை கொல்லப்பட்டதற்குப் பழிவாங்குவதாகத் உறுதியளித்திருந்தார்.
கமேனி இறுதிச்சடங்கு முடிந்த பின்னர் மொஜ்தபா கமேனி வெளியிட்ட செய்தியில், “பழிவாங்குவது எங்கள் தேசத்தின் விருப்பம். அது கட்டாயமாக நிறைவேற்றப்படும். ” என தெரிவித்திருந்தார்.
இதுபற்றி செய்தி வெளியிட்ட ஈரான் பத்திரிகை ஒன்று, “இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள குற்றவாளிகள், அமைதியான முறையில் இறக்காமல், கல்லறைக்குச் செல்வார்கள்” எனத் தெரிவித்து மொஜ்தபா கமேனி அறிக்கையுடன் 13 வெளிநாட்டுத் தலைவர்களின் புகைப்படங்களையும் இணைத்து விளக்கப்படம் வெளியிட்டது.
அந்தச் செய்தியுடன் வெளியிட்ட விளக்கப்படத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பிரிட்டிஷ் பிரதமர் கீர் ஸ்டார்மர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
அவர்களுடன் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்செத், பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரோன், இத்தாலியப் பிரதமர் ஜார்ஜியா மெலோனி மற்றும் ஜெர்மன் சான்சிலர் ஃபிரெட்ரிக் மெர்ஸ் ஆகியோரும் அந்த விளக்கப்படத்தில் குறிப்பிடப்பட்டிருந்தனர்.
குறிவைக்க வேண்டிய நபர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக மொஜ்தபா கமேனி தனது செய்தியில் குறிப்பிட்டதாகக் கூறப்படும் நிலையில், அது அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டதா என்பது தெரியவில்லை.
போரில் ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேலின் தாக்குதல்களைக் கண்டிக்கத் தவறியதாகவும், அமெரிக்காவின் விமானங்கள் தங்களின் வான்வெளியைப் பயன்படுத்த அனுமதித்ததாகவும் ஐரோப்பிய நாடுகள் மீது ஈரான் குற்றம் சாட்டியது.
போர் தொடங்குவதற்கு முன்பிருந்தே மொஜ்தபா கமேனி பொதுவெளியில் எங்கும் வெளிப்படவில்லை. மேலும், அவரது தந்தை மீது நடத்தப்பட்ட தாக்குதலின்போது அவருக்கும் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
