சிங்கப்பூரில் பணமோசடி வழக்குடன் தொடர்புடைய சொகுசு கார்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளன.
இதற்கமைய 11 றோல்ஸ் – றோய்ஸ் ( Rolls-Royce) கார்கள், இரண்டு பென்ட்லி ஃபிளையிங் ஸ்பர் லிமோசின்கள் ( Bentley Flying Spur limousines) மற்றும் ஃபெராரி (Ferrari), மெக்லாரன் (McLaren) போன்ற பிராண்டுகளின் சூப்பர் கார்கள், அத்துடன் டொயோட்டா ஆல்ஃபார்ட் (Toyota Alphard) மற்றும் டொயோட்டா வெல்ஃபயர் ( Toyota Vellfire) போன்ற 24 உயர் ரக ஏழு இருக்கைகள் கொண்ட கார்களும் இதில் அடங்கும்.
இந்தக் கார்கள் 2017 மற்றும் 2023இற்கு இடையில் பதிவு செய்யப்பட்டு, செல்லுபடியாகும் உரிமைச் சான்றிதழ்களைக் கொண்டுள்ளன.
மே 13, 2023 அன்று பதிவு செய்யப்பட்ட இரண்டு றோல்ஸ் – றோய்ஸ் ஃபாண்டம் EWB சீரிஸ் II கார்களில் ஒன்று, வெறும் 284 கி.மீ. மட்டுமே ஓட்டப்பட்டிருந்தது. அதே மாதத்தில் பதிவு செய்யப்பட்ட ஃபெராரி SF90 ஸ்ட்ராடேல் பிளக்-இன் ஹைப்ரிட் காரின் ஓடோமீட்டர் 500 கி.மீ. ஓடியுள்ளது.
ஓகஸ்ட் 15, 2023 அன்று, பணமோசடி தடுப்புக்காக காவல்துறை நடத்திய அதிரடிச் சோதனையில் 10 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டு அவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன.
போலி ஆவணம் தயாரித்தல் உள்ளிட்ட பல குற்றங்களுக்காக 13 முதல் 17 மாதங்கள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
தண்டனைக் காலம் முடிந்ததும், அவர்கள் நாடு கடத்தப்பட்டு, சிங்கப்பூருக்குள் மீண்டும் நுழைய தடை விதிக்கப்பட்டது.
மேலும், அவர்கள் தங்கள் தண்டனையின் ஒரு பகுதியாக, விசாரணையில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் சொத்துக்களையும் ஒப்படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
