கேரளத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட சம்பவங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 7 பேர் காணாமல் போயுள்ளதாக முதல்வர் வி.டி. சதீசன் இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.
கேரளத்தின் பத்தனம்திட்டா, இடுக்கி, வயநாடு, கோட்டயம், கோழிக்கோடு, கண்ணூா் ஆகிய மாவட்டங்களில் சனிக்கிழமை அதிகாலை தொடங்கிய பலத்த மழை நள்ளிரவு வரை கொட்டித் தீர்த்தது. இதனால் தாழ்வான இடங்கள், ஆற்றங்கரையோரப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. வீடுகள், கடைகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினா். பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டன. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அவசரக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சதீசன்,
மாநிலம் முழுவதும் நிலவும் சூழலை அரசு ஆய்வு செய்ததாகவும், பத்தனம்திட்டாவின் சில பகுதிகளைத் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மீட்புப் பணிகளுக்காக கொல்லத்திலிருந்து 14 மீன்பிடிப் படகுகள் செங்கன்னூருக்கு அனுப்பப்பட்டுள்ளது. சூலூர் (தமிழ்நாடு) தளத்திலிருந்து இரண்டு ஹெலிகாப்டர்கள் திருவனந்தபுரத்தை வந்தடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட பகுதியில் தேசிய பேரிடர் மீட்புப் படையின் ஒரு குழு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
ஹெலிகாப்டர்கள் மற்றும் தரைவழி மீட்புக் குழுக்கள் மூலம் விநியோகிப்பதற்காக உணவுப் பொட்டலங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளன.
திங்கள்கிழமை காலை 9 மணி நிலவரப்படி, கேரளம் முழுவதும் 316 நிவாரண முகாம்கள் செயல்பட்டு வருவதாகவும், அவற்றில் 11,018 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கோட்டயத்தில் மூவர், பூஞ்சார் தொகுதியின் எராட்டுப்பேட்டா பகுதியைச் சேர்ந்த இருவர் மற்றும் புதுப்பள்ளியில் உள்ள நீர்நிலை ஒன்றில் தவறி விழுந்த ஒரு குழந்தை, இடுக்கியில் 2 உயிரிழப்புகளும்,
விழிஞ்சம், முதலப்பொழி ஆகிய இடங்களில் தலா ஒரு உயிரிழப்பும், கொல்லத்தில் 2, மலப்புரத்தில் 4 உயிரிழப்புகளும், கண்ணூரில் ஒருவரும், கோழிக்கோட்டில் ஒருவர் என மொத்தம் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர். ஏழு பேர் காணாமல் போயுள்ளதாக முதல்வர் தெரிவித்தார்.
கனமழைக்கு 164.98 ஹெக்டேர் பரப்பளவில் பயிர் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் 3,596 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆரம்பக்கட்ட மதிப்பீடுகள் காட்டுவதாக அவர் கூறினார். இருப்பினும், இறுதி மதிப்பீடுகள் முடிந்ததும் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
