அலங்காரக் கந்தனாம் நல்லூர் ஶ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் பெருமையை மேலும் மெருகூட்டும் வகையில், ஆலயத்தின் வடக்கு திசையில் கோவில் வீதியில் அமைக்கப்பட்டுள்ள அலங்காரத் தோரண வாசலான ‘நல்லூரான் வடக்கு வாசல் வளைவு’, ஆடிக் கார்த்திகை நன்னாளான 2026 ஓகஸ்ட் 6 ஆம் நாள் (வியாழக்கிழமை) தெய்வேந்திர முகூர்த்தமாகிய நண்பகல் 12.00 மணிக்கு காண்பிய விரிப்புக் காணவுள்ளது.
இதனை முன்னிட்டு, அன்று காலை 10.30 மணிக்கு சட்டநாதர் சிவன் கோவிலிருந்து சமய அனுஷ்டானங்களுடன், நெல் மணிகள் நிரம்பிய பெட்டகத்தை ஏற்றிய இரட்டை திருக்கை காளை மாட்டு வண்டில் மங்கள வாத்தியங்கள் முழங்க வளைவை நோக்கிப் புறப்படும்.
அதனைத் தொடர்ந்து, தெய்வேந்திர முகூர்த்தமாகிய நண்பகல் 12.00 மணிக்கு, எம்பெருமானுக்காக அழைத்து வரப்பட்ட நெல் மணிகள் நிரம்பிய பெட்டகத்துடன் வரும் காளை மாட்டு வண்டில் முதன்முறையாக புதிய வளைவின் ஊடாகச் செல்லும். அந்த மங்கள நிகழ்வின் மூலம் ‘நல்லூரான் வடக்கு வாசல் வளைவு’ காண்பிய விரிப்புக் காணும்.
யாழ்ப்பாணத்தின் கந்தபுராண மரபையும் கலாசாரப் பாரம்பரியத்தையும் எடுத்தியம்பும் வகையில் இவ்வளைவு வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
