கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம், சம்மர்லேண்ட் பகுதியில் வேகமாகப் பரவி வரும் ‘பால்ட் ரேஞ்ச்’ காட்டுத்தீ காரணமாக 80 வயது மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார் என கனடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேடோ வேலி பகுதியில் காட்டுத்தீ பரவியதையடுத்து, தனது குடும்ப உறுப்பினருடன் வீட்டை விட்டு வெளியேற முயன்றபோதே அந்த மூதாட்டி திடீரென உயிரிழந்துள்ளார்.
சனிக்கிழமை அதிகாலை 1 மணியளவில், தீயிலிருந்து தப்பிக்க முயன்ற மற்றொரு நபர் மூதாட்டியின் உடலைப் பார்த்து பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
மூதாட்டியின் இறப்பிற்கு காட்டுத்தீயே காரணம் எனப் பொலிஸார் நம்பும் போதிலும், மரணத்திற்கான சரியான காரணத்தைக் கண்டறிய பிரேதப் பரிசோதனைச் சேவை விசாரணையைத் தொடங்கியுள்ளது.
வேறு எவரும் இக்காட்டுத்தீயில் உயிரிழந்ததாகத் தகவல் இல்லை. வெள்ளிக்கிழமை மாலை 5:15 மணியளவில் பற்றிய இக்காட்டுத்தீ, மிகக் குறுகிய காலத்தில் பிரம்மாண்டமாகப் பரவி, ஒகனகன் ஏரியை நோக்கி நகர்ந்தது.
இதில் ஃபோல்டர் மற்றும் மேடோ வேலி பகுதிகள் கடுமையாக எாிந்து சேதமடைந்துள்ளன. காட்டுத்தீயின் தீவிரத்தால் சம்மர்லேண்ட் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் 20,000 இற்கும் மேற்பட்ட மக்கள் தங்களது வீடுகளை விட்டுப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
