கரூரில் தனது பேத்தியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட இளைஞரை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டிய பாட்டியால் அந்தப் பகுதியில் பரபரப்பான சூழல் உருவானது.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கூலித்தொழிலாளி ஒருவர் தனது 4 வயது மகளை கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு பாட்டியின் வீட்டில் விடுமுறைக்காக விட்டு வந்திருக்கிறார்.
அப்போது அதேப் பகுதியைச் சேர்ந்தவர் விஜய் மாணிக்கம் (31). இவருக்குத் திருமணமான நிலையில், இவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக தனது தாயாரின் வீட்டுக்குச் சென்று விட்டார் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அந்தச் சிறுமியை பாட்டியிடம் கூட்டிச் செல்வதாகக் கூறி, தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை செய்தார் எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்தச் சிறுமி தனது பாட்டியிடம் கூறிய நிலையில், இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.
சிறுமிக்கு நேர்ந்த கொடுமையை அறிந்து ஆத்திரமடைந்த சிறுமியின் பாட்டி, அரிவாளுடன் கடந்த 4 நாள்களாக தேடிவந்துள்ளார். மாணிக்கம் கட்டட வேலைப் பார்த்துவருகிறார் என பாட்டிக்குத் தகவல் கிடைத்திருக்கிறது.
அதன்பின்னர், குளித்தலையில் இருந்த மாணிக்கத்தை நடுரோட்டில் ஓட ஓட விரட்டிச் சென்ற சிறுமியின் பாட்டி அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார்.
கொடூரமாக பாட்டி தாக்கியதில் மாணிக்கத்தின் உடலில் 10 இடங்களில் வெட்டு விழுந்து, அவர் ரத்தக்காயத்தில் கீழே விழுந்து அலறித்துடித்துள்ளார். இதைப் பார்த்த அங்கிருந்த சுற்றியிருந்த மக்களும் குற்றஞ்சாட்டப்பட்ட மாணிக்கத்தை வளைத்துப் பிடித்து சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
பின்னர், படுகாயமடைந்த மாணிக்கத்தை பாட்டியுடன் சேர்ந்த அந்தப் பகுதி மக்கள் அனைவரும் இழுத்துச் சென்று காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, காயமடைந்த மாணிக்கத்திற்கு சிகிச்சை அளிப்பதுடன் அந்தச் சிறுமியின் பாட்டியை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். போக்சோ வழக்கில் அந்த நபரை கைது செய்த போலீசார், படுகாயமடைந்துள்ளதால் அந்த நபரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
சிறுமிக்கு நடந்த பாலியல் தொல்லைக்கு எதிராகப் பாட்டி நடுரோட்டில் அரிவாளால் வெட்டி, பொலிஸில் ஒப்படைத்த சம்பவமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
